ஆயுதங்களுடன் பேரணி செல்லச் சொன்னாரா ராமர்... மமதா சுளீர் கேள்வி!
ராம நவமியில் நடைபெற்ற வன்முறை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மமதா பானர்ஜி ராமர் ஆயுதங்களுடன் ஊர்வலம் போகச்சொன்னாரா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கொல்கத்தா : தடையை மீறி மேற்குவங்கத்தில் நேற்று பாஜக, சங்க் பரிவார் அமைப்புகள் நடத்திய ராம நவமி பேரணி கலவரத்தால் ஒருவர் உயிரிழந்தார், 5 காவலர்கள் காயமடைந்தனர். இந்நிலையில் ராமர் ஆயுதங்களுடன் ஊர்வலம் போகச் சொன்னாரா என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
ராமநவமியையொட்டி மார்ச் 25ம் தேதி மேற்குவங்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜக மற்றும சங்க் பரிவார் அமைப்புகள் சார்பாக பேரணிகள் நடத்தப்பட்டன. ஆயுதங்களை ஏந்திச் சென்ற இந்தப் பேரணியின் போது வன்முறை வெடித்தது.
ராம நவமி ஊர்வலத்தின் போது ஒருவர் உயிரிழந்த நிலையில் 5 காவலர்கள் காயம் அடைந்தனர். புருலியா மாவட்டத்தில் மோதல்கள் வெடித்ததற்கு முதல்வர் மமதா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மாநில அரசின் உத்தரவையும் மீறி ஆயுதங்களுடன் ஊர்வலம் நடத்தியவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

ஆயுதப் பேரணியை ராமர் கேட்டாரா?
தெற்கு 24 பர்கானஸ் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மமதா பானர்ஜி "ஆயுதங்கள் மற்றும் வாளுடன் ஊர்வலமாக செல்ல ராமர் யாரையும் கேட்டுக்கொண்டாரா? இந்து கடவுள் ராமரை அவமரியாதை செய்யும் இவர்களிடம் நாம் மாவட்ட நிர்வாகம் மற்றும் சட்டம் ஒழுங்கை கொடுத்துவிட முடியுமா? இதுபோன்று ஆயுதங்களுடன் ஊர்வலமாக சென்றவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என காவல்துறையை வலியுறுத்துகிறேன், குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றார்.

மதத்தின் பெயரில் அச்சுறுத்தல்
ஆயுதங்களுடன் பேரணியாக சென்றவர்களால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேற்கு வங்காளத்தின் கலாசாரத்தில் இந்த முறை கிடையாது. மதத்தின் பெயரில் அவர்கள் செய்வதை வருங்காலங்களில் அனுமதிக்க முடியாது. இதனை கடுமையாக தடுக்க வேண்டும் எனவும் மமதா காட்டமாக தெரிவித்தார்.

மிரட்டுவதற்காகவா?
பாரம்பரியமிக்க பொருட்களை பேரணியில் எடுத்துச் செல்ல மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மதத்தின் பெயரை கூறிக் கொண்டு கூலிப்படையினர் போல பயங்கர ஆயுதங்களை கொண்டு சென்றது தடுக்கப்பட வேண்டும். "அமைதியான ஊர்வலங்களுக்கு மட்டுமே நான் அனுமதியளித்தேன். ஆனால் துப்பாக்கி, ஆயுதங்களை ராமரின் பெயரில் பேரணியில் எடுத்துச் சென்றுள்ளனர். உள்ளூரில் உள்ள மற்ற சமுதாக மக்களை அச்சுறுத்தும் ரீதியிலோ அல்லது கொலை மிரட்டல் விடுக்கும் வகையிலோ இதனை திட்டமிட்மே செய்துள்ளனர்.

அமைதியான முறையில் கொண்டாட்டம்
மேற்குவங்கத்திற்கு என தனி கலாச்சாரம் உள்ளது. நாம் அனைத்து வகையான பண்டிகைகள் மற்றும் மதச்சடங்குகளை பின்பற்றுகிறோம். துர்கா பூஜை முதல் ரமலான் மற்றும் கிறிஸ்துமஸ் என எதுவாக இருந்தாலும் அமைதியான முறையிலேயே நடப்பதாக மமதா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications