இதுதான் சந்திரபாபு நாயுடு.. "சபாநாயகர்" பதவியை எங்களுக்கு தரணும்.. பாஜகவுக்கு போட்ட முக்கிய கண்டிஷன்
விஜயவாடா: தற்போது மத்தியில் பாஜக ஆட்சி அமைக்கத் தெலுங்கு தேசம் கட்சி ஆதரவளிக்க வேண்டும் என்ற சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், சந்திரபாபு நாயுடு சில நிபந்தனைகளை விதிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நமது நாட்டில் லோக்சபா தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் கடந்த இரு தேர்தல்களைப் போல இல்லாமல் லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.

தெலுங்கு தேசம்: பாஜக 240 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. இதனால் பாஜக ஆட்சியை அமைக்க என்டிஏ கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் ஆதரவு கட்டாயம் என்ற சூழல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாகத் தெலுங்கு தேசம் கட்சியிடம் 16 இடங்கள் இருக்கும் நிலையில், அக்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு என்ன முடிவை எடுக்கப் போகிறார் என்பது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
இப்படி லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், சந்திரபாபு நாயுடு கிங் மேக்கராக உருவெடுத்துள்ளார். இதற்கிடையே ஆந்திராவில் செய்தியாளர்களிடம் சந்திரபாபு நாயுடு சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். அதாவது தான் என்டிஏ கூட்டணியிலேயே இருப்பதாகவும் அதன் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவே டெல்லி சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
கிங் மேக்கர்: அதேநேரம் பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு தர சந்திரபாபு நாயுடு சில நிபந்தனைகளை விதிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கடந்த 2014இல் ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவைத் தனியாகப் பிரிக்க அப்போதைய மத்திய அரசு முடிவு செய்த நிலையில், அதற்கு சந்திரபாபு நாயுடு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இருப்பினும், அதையும் தாண்டியே தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது.
நிபந்தனை 1: இதனால் ஆந்திராவின் வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்த ஆந்திராவுக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்பதை சந்திரபாபு நாயுடு தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். இருப்பினும், மத்திய அரசு கடந்த 10 ஆண்டுகளாகவே இதற்குச் செவிசாய்க்கவில்லை. இதற்கிடையே இப்போது பாஜக ஆட்சி அமைக்க ஆதரவு தர வேண்டும் என்றால் ஆந்திராவுக்கு உடனடியாக சிறப்பு அந்தஸ்து தர வேண்டும் என சந்திரபாபு நாயுடு நிபந்தனை விதிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
நிபந்தனை 2: அது மட்டுமின்றி சபாநாயகர் பதவியை விட்டுதர வேண்டும் என்றும் சந்திரபாபு நாயுடு நிபந்தனை விதிப்பதாகக் கூறப்படுகிறது. பொதுவாக லோக்சபாவில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத இதுபோன்ற சூழல் ஏற்படும் போது சபாநாயகர் பதவி முக்கியமானதாக இருக்கும். ஏனென்றால் அவையில் முக்கிய முடிவுகள் எல்லாம் எடுக்கும் அதிகாரம் சபாநாயகருக்கே இருக்கும். இதன் காரணமாகவே சபாநாயகர் பதவி தங்களுக்குத் தேவை என்று அவர் வலியுறுத்தி இருக்கிறார்.
இது தவிர மத்திய அமைச்சரவையிலும் சில முக்கிய துறைகளை நாயுடு தரப்பு கேட்கிறதாம்.. குறிப்பாகச் சுகாதாரத் துறையைக் கேட்கிறதாம்.. ஜேடியு கட்சியை விட அதிக எம்பி சீட் இருப்பதால் தங்களுக்கு நிதிஷ் கட்சியை விட அமைச்சரவையில் கூடுதல் இடங்கள் தேவை என கண்டிஷன் போடுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பாஜக இந்த இரு நிபந்தனைகளுக்கும் செவி சாய்க்குமா இல்லை அமைச்சரவையில் கூடுதல் சீட்களை கொடுத்துவிட்டு சபாநாயகர் பதவியை தங்களிடமே தக்க வைத்துக் கொள்ளுமா என்பதை நாம் பொறுத்து இருந்தே பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications