எங்களை மக்களுக்காக வேலை செய்ய விடுங்க.. உங்க கால்ல கூட விழறேன்.. மமதா பானர்ஜி ஆவேசம்
கொல்கத்தா: பிரதமரின் ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? என்பது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விளக்கம் அளித்துள்ளார்.
யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
ஒடிசாவில் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்திய பிரதமர் மோடி முதல்வர் நவீன் பட்நாயக்குடன் ஆலோசனை நடத்தினார். இதேபோல் மேற்கு வங்கத்திலும் மோடி-மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இடையே ஆலோசனை நடைபெறவிருந்தது.
மம்தா புறக்கணிப்பு
இதன்படி இந்த கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி திட்டமிட்டபடி வந்தபோது மம்தா பானர்ஜி அரை மணி நேரம் தாமதமாக வந்ததாக தெரிகிறது. மேலும் புயல் சேத விவரங்களை அறிக்கையாக பிரதமரிடம் ஒப்படைத்த மம்தா வேறு ஒரு இடத்தில் புயல் சேத நிலவரத்தை பார்வையிட வேண்டியதுள்ளது என்று கூறி உடனடியாக அங்கு இருந்து புறப்பட்டு சென்றார் என்று தகவல்கள் கூறின.
நடந்தது என்ன?
மம்தா பிரதமரை அரை மணி நேரம் காக்க வைத்து விட்டதாக பாஜகவினர் குற்றம்சாட்டினார்கள். ஒரு முதல்வர் பிரதமருடனான சந்திப்பை தவிர்த்து விட்டு வெளியேறுவது இதுவே முதல் முறை என்றும் பாஜகவினர் கூறினார்கள். இதனால் இந்த விவகாரம் விஸ்வரூபமெடுத்தது. இந்த நிலையில் பிரதமரின் ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? என்பது குறித்து மம்தா பானர்ஜி இன்று விளக்கம் அளித்துள்ளார்.
தயாரான திட்டங்கள்
இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:- நேற்று ஒருதலைப்பட்சமான, தவறான செய்திகளை கூறி மத்திய அரசு என்னை அவமானபடுத்தியுள்ளது. எனவே ஒட்டுமொத்தமாக என்ன நடந்தது என்பதை உங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டியது எனது கடமையாகும். சயாஸ் புயலால் பாதிப்புக்குள்ளான பகுதிகளைப் பார்வையிட நான் திட்டமிட்டிருந்தேன். புயலால் ஏற்பட்ட சேதத்தைக் காண நான் சாகர் மற்றும் திகாவுக்குச் செல்ல வேண்டியிருந்தது. எனது திட்டங்கள் அனைத்தும் தயாரிக்கப்பட்டு தயாராக இருந்தன,.
பிரதமர் வரும் தகவல்
அப்போது புயல் சேத நிலைமையை மதிப்பிடுவதற்ககாக பிரதமர் மோடி வங்காளத்திற்கு வருகிறார் என்று எங்களுக்கு தகவல் வந்தது. எனவே அதற்கேற்ப திட்டங்களை நாங்கள் செய்தோம்.பிரதமர்-முதல்வர் கூட்டம் நடைபெறவிருந்த இடத்தை அடைந்த நேரத்தில், பிரதமர் சில காலத்திற்கு முன்பே அங்கு வந்துவிட்டார் என்பதையும், அங்கு ஒரு கூட்டம் நடந்து கொண்டிருப்பதும் எங்களுக்கு தெரியவந்தது.
காத்திருக்க வைத்தார்கள்
எங்களை வெளியே காத்திருக்கும்படி கூறினார்கள். ஒரு கூட்டம் நடந்து கொண்டிருப்பதால் உள்ளே செல்ல முடியாது என்று கூறினார்கள். நாங்கள் சிறிது நேரம் பொறுமையாக காத்திருந்தோம். பின்னர் நாங்கள் மீண்டும் கேட்டபோது, அடுத்த ஒரு மணி நேரத்திற்கு யாரும் உள்ளே நுழைய முடியாது என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு கூட்டம் கான்பிரன்ஸ் ஹாலில் மாறிவிட்டது என்று யாரோ எங்களிடம் சொன்னார்கள்.
எதிர்க்கட்சியினர் இருந்தனர்
எனவே தலைமைச் செயலாளரும் நானும் அங்கு செல்ல முடிவு செய்தோம். நாங்கள் அங்கு சென்றபோது, பிரதமர் மோடி, கவர்னர், மத்திய அரசு தலைவர்கள் மற்றும் எதிர்க்கட்சியின் சில எம்.எல்.ஏக்கள் ஆகியோருடன் ஒரு சந்திப்பில் இருப்பதைக் கண்டோம். இது ஒரு பிரதமர்-முதல்வர் கூட்டம் மட்டுமே என்று கூறப்பட்டது. ஆனால் அங்கு பாஜக தலைவர்கள், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். இதனால் கூட்டத்தின் நோக்கம் எங்களுக்கு தெளிவாக தெரிந்தது.
பிரதமர் அனுமதி பெற்றேன்
இதனை தொடர்ந்து நாங்கள் எங்கள் மாநில சேத அறிக்கையை பிரதமரிடம் சமர்பித்தோம். பின்னர் பிரதமரின் அனுமதியுடன் நாங்கள் திகா சென்றோம். வானிலை நன்றாக இல்லை. சேத நிலவரத்தை பார்வையிட நான் திகாவுக்கு செல்ல வேண்டும் என்று 3 முறை பிரதமரிடம் அனுமதி கோரினேன். அவர் அனுமதி கொடுத்ததால் அங்கு இருந்து கிளம்பி சென்றேன்.
தோல்வியை ஜீரணிக்க முடியவில்லை
ஒவ்வொரு முறையும் மத்திய அரசு ஏன் என்னை இப்படி குறிவைக்கிறது? குஜராத், ஒடிசா, பிற மாநிலங்களில் பிரதமர்-முதல்வர் ஆலோசனை கூட்டங்களில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை. ஆனால் வங்காளத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு முறையும் நீங்கள் இங்கு வரும்போது, எங்கள் அரசின் செயல்பாட்டை சீர்குலைக்க ஏதாவது செய்கிறீர்கள். எங்களை ஏன் அவமானப்படுத்துகிறீர்கள்? எங்களை ஏன் குறிவைக்கிறீர்கள்? எங்களை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்? வங்காளத் தேர்தலில் தோல்வியடைந்தீர்கள் என்ற உண்மையை உங்களால் ஜீரணிக்க முடியாததால் இவ்வாறு செய்கீறீர்கள்.
அவமானபடுத்த வேண்டாம்
வங்காளத்திற்கு பிரதமர் செய்த உதவிக்கு ஈடாக அவரது கால்களைத் தொடுமாறு பிரதமர் என்னிடம் சொன்னால், வங்காள மக்களுக்காகவும் வங்காளத்தின் முன்னேற்றத்துக்காகவும் அதைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன், ஆனால் தயவுசெய்து இந்த மோசமான அரசியல் விளையாட்டுகளை விளையாட வேண்டாம். வங்காளத்தை இப்படி தண்டிக்க வேண்டாம். கடுமையாக உழைக்கும் தலைமைச் செயலாளரை அவமானப்படுத்த வேண்டாம்.
தலைமை செயலாளர் திரும்ப வேண்டும்
தலைமைச் செயலாளரை திரும்ப அழைக்கும் இந்த கடிதத்தை திரும்பப் பெறுமாறு உள்துறை அமைச்சரிடம் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன். ஏன் அவரை குறிவைக்கிறீர்கள்? இதைச் செய்வதன் மூலம் நீங்கள் நாடு முழுவதும் உள்ள அனைத்து தலைமைச் செயலாளர்களையும் - அனைத்து மாநிலங்களிலும் அவமதிக்கிறீர்கள். தயவு செய்து தலைமைச் செயலாளரை எங்களிடம் திருப்பி ஒப்படையுங்கள். இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.