பாஜக நீக்குவதாக கூறும் காஷ்மீருக்கான அரசியல் சாசனப் பிரிவு 370 என்ன சொல்கிறது?
டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சானப் பிரிவான 370 ஐ நீக்குவோம் என்று பாஜக அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் வகையில் அரசியல் சாசனப் பிரிவு 370 உருவாக்கப்பட்டது. ஆனால் இந்த பிரிவை நீக்க வேண்டும் என்று தொடர்ந்து பாஜக குரல் கொடுத்து வருகிறது.
அண்மையில் இந்த சட்டம் குறித்து விவாதிக்க தயாரா? என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லாவுக்கு பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி கேள்வி எழுப்பியும் இருந்தார். இந்நிலையில் அந்த சாசனப் பிரிவை ரத்து செய்வோம் என்று அறிவித்துள்ளது பாஜக தேர்தல் அறிக்கை.
அதென்ன 370வது பிரிவு?
நாடு சுதந்திரம் அடைந்த காலத்தில் ஜம்மு காஷ்மீர் தனிநாடாக, ஹரிசிங் என்ற மன்னராட்சியின் கீழ் இருந்தது. அப்போது பாகிஸ்தான் படைகள் காஷ்மீரை இணைத்துக் கொள்ள முயன்றது. மன்னர் ஹரிசிங் இந்தியாவின் உதவியை நாடினார்.
இதனடிப்படையில் மன்னர் ஹரிசிங்- ஜவஹார்லால் நேரு இடையே 1947 ஆம் ஆண்டு ஒப்பந்தம் ஒன்று உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் இந்த விவகாரம் ஐ.நா. சபைக்கு போனது. ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இருக்க வேண்டுமா? பாகிஸ்தானுடன் இணைய வேண்டுமா? தனிநாடாக இருக்க வேண்டுமா? என்பதை வாக்கெடுப்பு மூலம் காஷ்மீர் மக்கள் தீர்மானித்துக் கொள்ளலாம் என்றது ஐ.நா. சபை.
ஆனால் அப்படியான ஒரு வாக்கெடுப்பு நடத்தப்படவில்லை. அதே நேரத்தில் இந்திய அரசியல் சாசனத்தில் 370 வது பிரிவு உருவாக்கப்பட்டு ஜம்மு காஷ்மீருக்கு சுயாட்சி உரிமை மற்றும் சிறப்பு அந்தஸ்துகள் அளிக்கப்பட்டன.
3 உரிமைகள்தான் மத்திய அரசுக்கு
இதன்படி பாதுகாப்பு, வெளியுறவு, நாணயம், செய்தித் தொடர்பு ஆகியவை மட்டும்தான் மத்திய அரசு வசம் இருக்கும் எஞ்சிய அனைத்து அதிகாரங்களுமே ஜம்மு காஷ்மீர் அரசிடம் இருக்கும்.
அத்துடன் ஜம்மு காஷ்மீர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறவர் ஜம்மு காஷ்மீர் பிரதமராக அழைக்கப்படுவார். அம்மாநிலத்தின் ஆளுநர், ஜம்மு காஷ்மீரின் ஜனாதிபதியாகத்தான் அழைக்கப்படுவார் என்று கூறப்பட்டது.
ஜனாதிபதி, பிரதமர்
இப்படி 1948ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் பிரதமராக பொறுப்பேற்றவர் சேக் அப்துல்லா. ஹரிசிங்கின் மகன் கரன்சிங், 1949ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டார். 1950ஆம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் அரசியல் சாசனப் பிரிவு 370 உருவாக்கப்பட்டது.
1956ஆம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்ஹ்ட பகுதியாக்கப்பட்டது. அதன் பின்னர் 370வது பிரிவில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு ஜனாதிபதி, ஆளுநராக்கப்பட்டார். காஷ்மீர் பிரதமர் மாநிலத்தின் முதல்வராக்கப்பட்டார்.
தனி அரசியல் சாசனம், கொடி
ஆனாலும் இந்தியாவின் வேறு எந்த மாநிலத்துக்கும் இல்லாத வகையில் ஜம்மு காஷ்மீருக்கு தனி அரசியல் சாசனம், கொடி உள்ளிட்ட பல உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் அண்மையில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் மோடி கூறிய நில உரிமை தொடர்பானது.
அதாவது " ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லாவின் சகோதரி சாரா அப்துல்லா வேறு மாநிலத்தவரை திருமணம் செய்து கொண்டதால் அவரது உரிமைகள் பறிபோயின. ஆனால், வெளிமாநிலத்துப் பெண்ணை ஒமர் அப்துல்லா திருமணம் செய்துகொண்டாலும் அவரது உரிமைகள் பறிபோகவில்லை. இது பெண்களுக்கு எதிரான அநீதியாகும்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் ஒட்டுமொத்தமாக 370வது பிரிவையே ரத்து செய்வோம் என்று பாஜக தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது புதிய சர்ச்சையை உருவாக்கி வைத்திருக்கிறது.