கேரளாவில் நர்ஸ் வேலைக்கு ஆள் எடுப்பதில் ரூ.200 கோடி ஊழல்!
திருவனந்தபுரம்: கேரளாவில் ரூ.200 கோடி அளவுக்கு நர்ஸிங் வேலைக்கு ஆட்கள் எடுப்பதில் ஊழல் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.
கேரள மாநிலத்தில் ஏராளமானோர் நர்ஸிங் படித்துவிட்டு வெளிநாடுகளில் வேலைக்கு செல்கிறார்கள். இந்நிலையில் குவைத் நாட்டுக்கு நர்ஸ் வேலைக்கு ஆட்கள் எடுப்பதில் மெகா ஊழல் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது.
எர்ணாகுளத்தில் உள்ள அல் ஜரபா குழுமத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தியபோது ரூ.200 கோடிக்கு ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஊழல் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயங்கள் வருமாறு,

அல் ஜரபா குழுமம்
குவைத்தின் சுகாதார அமைச்சகம் 1,200 நர்ஸுகளை பணியமர்த்துமாறு அல் ஜரபா குழுமத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நர்ஸ் பணிக்கான நேர்காணலை அந்த குழுமம் நடத்தியுள்ளது. எர்ணாகுளத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் நடந்த நேர்காணலில் குவைத் அமைச்சக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ஐடி ரெய்டு
மார்ச் மாதம் கடைசி வாரத்தில் வருமான வரித்துறையினர் அந்த குழுமத்தின் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அந்த சோதனையில் அல் ஜரபா குழுமம் நர்ஸ் வேலையில் சேர விரும்பும் 450 பேரிடம் இருந்து ரூ.110 கோடி வசூல் செய்தது தெரிய வந்தது. அதாவது ஒவ்வொருவரிடமும் இருந்து ரூ.19 ஆயிரத்து 500 பெறுவதற்கு பதிலாக ரூ19.5 லட்சம் வாங்கியுள்ளது.
குற்றவாளி
கொச்சியில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத் துறையைச் சேர்ந்த புலம்பெயர்ந்தவர்களின் காப்பாளரான எல்.ஆடோல்பஸ் முக்கிய குற்றவாளி என்று எப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு பெண் அவரிடம் நர்ஸிங் முறைகேடு பற்றி புகார் தெரிவித்தபோது அவரோ அந்த புகாரை அல் ஜரபாவிடம் அளித்துள்ளார். அல் ஜரபா அந்த பெண்ணை மிரட்டியுள்ளது.
உதூப் வர்கீஸ்
அல் ஜரபா குழும டிராவல், டூர் மற்றும் மேன்பவர் கன்சல்டன்ட்ஸின் உரிமையாளர் துபாயில் வசிக்கும் கோட்டயத்தைச் சேர்ந்த உதூப் வர்கீஸ் ஆவார். ஏர்பல் 19ம் தேதி உதூப் வர்கீஸை குவைத் போலீசார் கைது செய்தனர். ஆனால் மத்திய கிழக்கு நாடுகளில் அவர் மீது எந்த வழக்கும் இல்லாததால் அவர் விடுவிக்கப்பட்டார். பணத்தை அளித்த நர்ஸுகள் யாரும் இதுவரை புகார் அளிக்க முன்வரவில்லை. இந்நிலையில் உதூப் முன்ஜாமீன் கோரி எர்ணாகுளம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
சிபிஐ
உதூப்பின் ஜாமீன் மனுவை நிராகரிக்குமாறு சிபிஐ அதிகாரிகள் கடந்த 6ம் தேதி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். உதூப் நிழல் உலகத்துடன் தொடர்புடைய கிரிமினல் என்றும், அவர் நிதி மோசடி செய்தவர் என்றும் சிபிஐ தெரிவித்துள்ளது. மேலும் உதூப் தேடப்படும் குற்றவாளி என்று நோட்டீஸ் வெளியிடவும் திட்டமிட்டுள்ளதாக சிபிஐ அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications