பலாத்காரம் இரண்டு வகை: உ.பி. அமைச்சர் அரிய கண்டுபிடிப்பு
லக்னோ: பாலியல் பலாத்காரம் என்றால் என்ன?. அப்படி ஒன்றே கிடையாது என்று கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார் உத்தர பிரதேச மாநில அமைச்சர் தோட்டாராம் யாதவ்.
உத்தர பிரதேச மாநிலத்தில் பாலியல் பலாத்கார சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் அம்மாநில அமைச்சரும், ஆளும் சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவருமான தோட்டாராம் யாதவ் பலாத்காரத்திற்கு புதிய விளக்கம் அளித்துள்ளார்.
மாநிலத்தில் பலாத்கார சம்பவங்கள் நடப்பதை கட்டுப்படுத்த முடியுமா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் கூறுகையில்,
பாலியல் பலாத்காரம் என்றால் என்ன?. அப்படி ஒன்றே கிடையாது. ஆணும், பெண்ணும் சம்மதித்து தான் பலாத்காரங்கள் நடக்கின்றன. பாலியல் பலாத்காரத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று வலுக்கட்டாயமாக நடப்பது, மற்றொன்று சம்மதத்துடன் நடப்பது என்றார்.
தோட்டாராமின் பேச்சு குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமாஜ்வாடி கட்சி தலைவர் கௌரவ் பாட்டியா தெரிவித்துள்ளார். முன்னதாக சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ் கடந்த ஆண்டு கூறுகையில், பலாத்கார வழக்கில் சிக்கயவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டுமா? அவர்கள் ஆண்கள், தவறு செய்யத் தான் செய்வார்கள் என்று பொறுப்பில்லாமல் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.