‘செம்மரம் என்ன கலர்னு கூட எனக்குத் தெரியாது’... ஜாமீனில் வந்த நீத்து அகர்வால் பேட்டி
நகரி : செம்மரக்கட்டைக் கடத்தில் தான் ஈடுபடவில்லை, செம்மரக்கட்டை என்ன கலரில் இருக்கும் என்று கூட தனக்குத் தெரியாது எனத் தெரிவித்துள்ளார் நடிகை நீத்து அகர்வால்.
செம்மரகட்டை கடத்தல் தொடர்பான வழக்கில் சினிமா தயாரிப்பாளர் மஸ்தான் வலி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருடன் குடித்தனம் நடத்தி வந்த நடிகை நீத்து அகர்வாலும் கைது செய்யப்பட்டார்.
நீத்து அகர்வாலின் வங்கிக் கணக்கு முடக்கப் பட்டது. அதில் போலீசார் நடத்திய ஆய்வில் மேலும் செம்மரக்கடத்தலில் தொடர்புடைய 15 பேரின் விவரம் கண்டுபிடிக்கப் பட்டது.
இந்நிலையில், நேற்று முன்தினம் நடிகை நீத்து அகர்வால் ஜாமீனில் வெளியே வந்தார். அதனைத் தொடர்ந்து ஆந்திர தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு நீத்து அகர்வால் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது :-
மஸ்தான் வலி என் கணவர்...
செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட தெலுங்கு பட தயாரிப்பாளர் மஸ்தான் வலி எனது கணவர் ஆவார். அவர் என்னை திருமணம் செய்து கொண்டார்.
8 படங்கள்...
ராஜஸ்தானை சேர்ந்த நான் ஐதராபாத் வந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தேன். 8 படங்களில் நடித்துவிட்டேன்.
கதாநாயகியாக நடித்தேன்...
மஸ்தான்வலி தயாரித்த படத்தில் நான் கதாநாயகியாக நடித்தேன். படப்பிடிப்பு நேரங்களில் அவர் என்னை நன்றாக கவனித்துக் கொண்டார். அவரது நடவடிக்கை எனக்கு பிடித்திருந்தது.
காதல்... திருமணம்
படம் 90 சதவீதம் நிறைவடைந்த வேளையில் எங்களுக்குள் காதல் ஏற்பட்டது. இதையடுத்து நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு குடித்தனம் நடத்தினோம்.
ரியல் எஸ்டேட்...
சினிமா தவிர மஸ்தான் வலி ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபடுவதாக கூறினார். அவர் செம்மர கடத்தலில் ஈடுபடுவது எனக்கு தெரியாது.
என்ன கலர்னு கூட தெரியாது...
அவர் எனது கணவர் என்பதால் பணம் போட்டு எடுப்பதற்காக எனது வங்கி ஏ.டி.எம் கணக்குகளை பயன்படுத்தினார். மற்றபடி எனக்கும் செம்மர கடத்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. செம்மர கட்டை என்ன நிறத்தில் இருக்கும் என்றே எனக்கு தெரியாது.
என் சுய சம்பாத்தியம்...
ஹைதராபாத்தில் உள்ள வீட்டை எனக்கு மஸ்தான் வலி வாங்கி தரவில்லை. நான் படங்களில் நடித்து தான் அந்த வீட்டை வாங்கினேன்' என இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.