மொத்தம் 44 குழாய்கள்.. இன்னும் 10 மீட்டர் தான் கேப்.. உத்தரகண்ட் மீட்பு பணிகள்! இவ்வளவு இருக்கா
உத்தரகாசி: உத்தரகண்ட்டில் சுரங்க தொழிலாளர்களை மீட்கும் பணிகள் நடந்து வரும் நிலையில், மீட்புப் பணிகள் இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
உத்தரகண்ட் மாநிலம் சில்கியாரா என்ற பகுதியில் கட்டப்பட்டு வந்த சுரங்கத்தில் திடீரென மண் சரிவு ஏற்பட்டது. கடந்த நவ.12ஆம் தேதி இந்த விபத்து ஏற்பட்ட நிலையில், 41 தொழிலாளர்கள் அப்படியே உள்ளே சிக்கினர்.

அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் கடந்த 12 நாட்களாகச் சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றிரவு நிலவரத்தின்படி உள்ளே சிக்கியுள்ள ஊழியர்களுக்கும் அந்த சுரங்க கழிவுகளுக்கும் இடையே வெறும் 10 மீட்டர் மட்டுமே இடைவெளி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
உத்தரகண்ட் தொழிலாளர்கள்: உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்கள் வெளியே வரப் பெரிய குழாய்களை உள்ளே இறக்கி அதன் வழியாக அவர்களை வெளியே எடுத்து வருவதே திட்டமாகும். இதற்காக ஒரு மணி நேரத்தில் சுமார் 3 மீட்டர் வரை துளையிடும் ஆகர் இயந்திரத்தைப் பயன்படுத்தினர். இருப்பினும், இன்று அதிகாலை அதில் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து உலோக கட்டரை பயன்படுத்தி அந்தப் பிரச்சினையைச் சரி செய்து மீட்புப் பணிகளைத் தொடங்கினர்.
ஒரு பக்கம் ஆகர் இயந்திரம் துளையிடும்போதே, அங்கே குழாய்களும் இறக்கப்படுகிறது. குழாய் முழுவதும் இறக்கப்பட்டதும். அவர்கள் பாதுகாப்பாக மேலே அழைத்து வரப்படுவார்கள். குழாயின் இறுதிப் பகுதியை இணைத்து வெல்டிங் செய்ய டெல்லியில் இருந்து வெல்டர்கள் வரவழைக்கப்பட்டனர். துளையிடும் பணிகள் முடிந்தவுடன் அவர்கள் பைப்களை இணைக்க வெல்டிங் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
44 குழாய்கள்: மேலே இருந்து துளையிட ஆரம்பித்து முதல் இதுவரை 44 குழாய்கள் செருகப்பட்டுள்ளன. இவை மூலமே அந்த ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியே அழைத்துவரப்பட உள்ளனர்.
ஆனால் சுரங்கப்பாதையில் இருந்து தொழிலாளர்களை வெளியே கொண்டு வருவது மட்டும் இந்த மீட்புப் பணிகளை முடித்துவிடாது. அந்த 41 ஊழியர்களும் கடந்த 12 நாட்களாக உள்ளே இருக்கிறார்கள், இந்த இடைப்பட்ட நேரத்தில் அவர்கள் வெளியே இருந்து இரு முறை மட்டுமே உணவைப் பெற்றுள்ளனர், மேலும், சுரங்கத்திற்கு வெளியேயும் உள்ளேயும் வெப்ப நிலை மாறுபாடு இருக்கிறது. மேலும், இதனால் ஏற்படும் உளவியல் தாக்கங்களும் இருக்கிறது. அதை எல்லாம் கவனித்துச் சரி செய்ய வேண்டும்.
மருத்துவர்கள் தயார் நிலை: இதற்காக அங்கே மருத்துவர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர், தேசிய பேரிடர் மீட்புப் படையுடன் அங்கே களத்தில் இருக்கும் மருத்துவர் ஒருவர் அவர்கள் நிலையைப் பரிசோதிப்பார். வெல்டிங் செய்யப்பட்ட குழாய்கள் கூர்மையாக இருக்கும் என்பதால், அதில் காயமாகாமல் எப்படித் தப்பிப்பது என்பது குறித்தும் அந்த மருத்துவர் அவர்களுக்கு விளக்குவார். மேலும், வெளியே வந்ததும் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கும் அழைத்து ஸ்ட்ரெச்சர்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
அந்த குழாயில் இருந்து அவர்கள் மேலே வரும் போது அவர்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் வழிநடத்துவார்கள். இந்த 41 தொழிலாளர்களை சிகிச்சையாக்க ஒரு தற்காலிக மருத்துவமனையும் அமைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் மருத்துவமனைக்கு வந்தவுடன் விரிவான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications