உடனடி தேவை வேலை வாய்ப்பு.. தீவிரவாதம் பிரச்சினையில்லை.. மக்கள் மனநிலை.. சுவாரசிய சர்வே
Recommended Video
போபால்: வேலை வாய்ப்பு தேவை என்பதுதான் மக்களின் முதல் முன்னுரிமையாக உள்ளது என்பது மத்திய பிரதேசத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. தீவிரவாதம் குறித்து மக்கள் அதிகம் கவலைப்படவில்லை என்பதும் இந்த கருத்து கணிப்பில் உள்ள சுவாரசிய தகவலாகும்.
ஜனநாயக சீரமைப்புக்கான சங்கம், என்ற அமைப்பு மத்திய பிரதேசத்தின் அனைத்து லோக்சபா தொகுதிகளிலும் ஒரு ஆய்வு நடத்தியது. கடந்த, ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை இந்த ஆய்வு 15 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்டது.
மத்தியபிரதேச மக்களுக்கு என்னென்ன அடிப்படைத் தேவைகள் உள்ளன என்பதை அறிந்து கொள்வதற்காக இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னுரிமை
குடிநீர், மின்சாரம், சாலை வசதி, உணவு, கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற 25 வகையான தேவைகள் பட்டியலிடப்பட்டு, அது வாக்காளர்களிடம் வழங்கப்பட்டு எந்த பிரச்சனைக்கு முன்னுரிமை கொடுக்கிறார்கள் என்று அறிந்து கொள்வதற்காக இந்த சர்வே நடத்தப்பட்டது. மேலும், இந்த 25 அடிப்படை விஷயங்களில் அரசு எவ்வாறு செயல்பட்டுள்ளது என்பது குறித்த மதிப்பீட்டை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. நன்று, பரவாயில்லை, மோசம் என்ற வாய்ப்புகள் மக்களுக்கு கொடுக்கப்பட்டன.
வேலை வாய்ப்பு முக்கியம்
இந்த சர்வேயில், நல்ல வேலை வாய்ப்பு வசதி வேண்டும் என்பதுதான் கிராமப்புறங்களில் உள்ள மக்களின் முக்கியமான கோரிக்கையாக இருப்பது தெரியவந்தது. 59% மக்கள் தங்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு தேவை என்று தெரிவித்தனர். நகரங்களில் 70 சதவீதம் பேர் இவ்வாறு கூறியுள்ளனர். விலைவாசி ஏற்றம் கண்டுள்ளது என்றும் அதை குறைக்க வேண்டும் என்பதும் 56 சதவீத மக்களின் கோரிக்கை.
தீவிரவாதம்
மின்சார வசதி மற்றும் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கையை 40 சதவீத வாக்காளர்களால் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் வேலைவாய்ப்பு பிரச்சனை என்று கூறக்கூடியவர்களில் 4 சதவீதம் பேர் மட்டுமே வேலைக்கேற்ற பயிற்சி அவசியம் என்று ஒப்புக்கொண்டுள்ளனர்.
சிறப்பான சாலை வசதி தேவை என்று 26 சதவீதம் பேரும், சிறப்பான பொது போக்குவரத்து தேவை என்று 21 சதவீதம் பேரும், குடிநீர் வசதி தேவை என்று 70 சதவீதம் பேரும் பெண்கள் பாதுகாப்பு மேம்படுத்தப்பட வேண்டும் என்று 6 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர். 4 சதவீதம் பேர்தான், தீவிரவாதம் ஒரு பிரச்சினை என்று கூறியுள்ளனர்.
பாராட்டுகள்
மத்திய பிரதேச அரசு, குடிநீர், ஏரிகள் பராமரிப்பு உள்ளிட்டவற்றில் தோல்வியடைந்துள்ளதாக பெருவாரியான மக்கள் தெரிவித்துள்ளனர். அதேநேரம், சிறப்பான மருத்துவ சேவை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பாக செயல்படுவது, சட்டம்-ஒழுங்கு நல்லபடியாக பேணப்பட்டது போன்றவையெல்லாம் அதற்கு அடுத்தபடியாக மக்களிடம் நன் மதிப்பைப் பெற்றுள்ளன.
வாக்கு பதிவு
மேலும் வாக்களிக்கும் முன்பாக வாக்காளரை கருத்தில் கொண்டு ஓட்டு போடுவதாக பெரும்பாலான மக்கள் தெரிவித்துள்ளனர். ஜாதி, மதம் போன்றவை அதற்குப் பிறகுதான் என்பது அவர்கள் கருத்து. வாக்குகளுக்கு, பணம், பரிசுப் பொருட்கள் கொடுக்கப்படுவது தங்களுக்கு தெரியும் என்று 61% வாக்காளர்கள் கூறுகிறார்கள். 95 சதவீத வாக்காளர்கள் குற்றப் பின்னணி உள்ள வேட்பாளருக்கு ஓட்டு போடக் கூடாது என்கிறார்கள்.