ஜெ. ஜாமீன் மனு விசாரணையில் அரசு வக்கீலாக பவானிசிங் நியமனம்: அன்பழகன் தரப்பு எதிர்க்குமா?
பெங்களூர்: ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணையில் அன்பழகன் தன்னையும் இணைத்துக்கொள்ளுவாரா என்ற பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.
ஜெயலலிதா ஜாமீன் மனு மீதான விசாரணை கர்நாடக ஹைகோர்ட்டில் நாளை விசாரணைக்கு வருகிறது. அரசு வக்கீலாக பவானிசிங் ஆஜராகிறார். இவரை அரசு வக்கீலாக நியமித்தது, தமிழக லஞ்ச ஒழிப்பு துறையாகும். இது அதிமுக ஆட்சியின்கீழ் செயல்படும் துறை என்பதால் பவானிசிங்கை அந்த துறை நியமித்தது எதிர்க்கட்சிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாசும் இந்த சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பவானிசிங் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக வாதிட்டதாக நீதிபதியாலே கண்டனத்துக்கு உள்ளானவர். அப்படிப்பட்டவரை தமிழக அரசின்கீழ் செயல்படும் ஒருதுறை, அரசு வக்கீலாக நியமித்துள்ளது சரியில்லை, இதில் நீதி கிடைக்காது என்று ராமதாஸ் கூறியுள்ளார். மேலும், ஜாமீன் மனுவில் திமுகவின் அன்பழகன் தன்னையும் இணைத்துக் கொண்டு பவானிசிங் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.
இந்நிலையில், நாளை ஜாமீன் மனு மீது விசாரணை நடக்கும்போது, பவானிசிங் நியமனத்துக்கு அன்பழகன் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தால், விசாரணை தள்ளிப்போக வாய்ப்பு ஏற்படும். இதனால் ஜெயலலிதா மேலும் சில நாட்கள் சிறையில் இருக்க வேண்டி வரும்.
ஆனால் திமுக சார்பில், அதுபோன்று வழக்கில் குறுக்கிடும் எண்ணம் இல்லாதது போல தெரிகிறது. திமுக தரப்பில் இதுகுறித்து கேட்டபோது, தலைவர் கருணாநிதி, அமைதிகாக்க சொல்லியுள்ளதாக தெரிவித்தனர். இருப்பினும் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெறும்போதுதான் இதில் கிளைமாக்ஸ் என்ன என்பது தெரியவரும்.