இந்தியர்களுக்கு மட்டும் வாட்ஸ்ஆப் சந்தா இல்லை: 'ஃப்ரீ, ஃப்ரீ, ஃப்ரீ'
டெல்லி: வாட்ஸ்ஆப் நிறுவனம் தங்களது சேவையை பயன்படுத்த இந்தியர்களுக்கு மட்டும் ஆண்டு சந்தா இல்லை என்று அறிவித்துள்ளது.
செல்போனில் எஸ்.எம்.எஸ். அனுப்பிய காலம் மெதுவாக மலையேறிக் கொண்டிருக்கிறது. எதற்கு காசு கொடுத்து எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும் எடுடா போனை அடிடா மெசேஜை அனுப்புடா வாட்ஸ்ஆப்பில் என்று இருக்கும் காலம் இது.
வாட்ஸ்ஆப்பில் இலவசமாக மெசேஜ் அனுப்ப முடியும் என்பதால் அது பலருக்கும் பிடித்துள்ளது. வாட்ஸ்ஆப் சேவையை பயன்படுத்த ஆண்டு சந்தாவாக ரூ.61 செலுத்த வேண்டும். ஆனால் இந்தியர்களுக்கு மட்டும் ஆண்டு சந்தா எதுவும் கிடையாது என்று வாட்ஸ்ஆப் அறிவித்துள்ளது. ஆயுள்காலத்திற்கும் சந்தா இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வாட்ஸ்ஆப் துணை தலைவர் நீரஜ் அரோரா கூறுகையில்,
இந்தியாவில் கிரெட்டி கார்டுகள் அதிகம் பயன்படுத்துவது இல்லை என்பதை எங்கள் நிறுவனம் புரிந்து கொண்டுள்ளது. ஒரு சேவைக்காக பணம் செலுத்துவது பலருக்கும் ஆப்ஷன் இல்லை. சேவையை புதுப்பிக்க நிறுவனம் ஆண்டுதோறும் ரூ.61 வசூலிக்கும். ஆனால் இந்தியர்களுக்காக சேவை இலவசம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது என்றார்.
இந்தியாவில் மட்டும் 7 கோடி பேர் வாட்ஸ்ஆப் பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.