ஆச்சரியம் இல்லை, வரலாறு.. கர்நாடக சட்டசபை தேர்தலில் 4 முறை வெற்றி பெற்ற அதிமுக! இப்போது சாதிக்குமா?
Recommended Video

பெங்களூர்: கர்நாடகாவில் வரும் 12ம் தேதி நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் 2 வேட்பாளர்கள் களமிறங்க உள்ளனர். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இந்த அறிவிப்பை நேற்று வெளியிட்டனர்.
கர்நாடகாவில் அதிமுக எப்படி போட்டியிட்டு தாக்குப்பிடிக்க முடியும் என்ற கேள்வி பலருக்கும் எழலாம். ஆனால், இதற்கு முன்பு அதிமுக சார்பில் 4 முறை வெற்றி ஈட்டப்பட்டுள்ளது என்ற தகவல் பலருக்கும் புதிதாக இருக்கும்.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளான காந்திநகர் மற்றும் தங்கவயல் ஆகிய தொகுதிகளில் இதற்கு முன்பாக அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

கர்நாடக முதல் தமிழ் எம்எல்ஏ
கர்நாடகாவில் முதல் தமிழ் எம்எல்ஏ என்ற பெருமையை பெற்றவர் பக்தவச்சலம். 1983ம் ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டசபை தேர்தலில் கோலார் மாவட்டத்திலுள்ள தங்க வயல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாகை சூடினார். இந்த தொகுதி தமிழகத்தின் எல்லையோர மாவட்டத்தில் அமைந்துள்ளதாலும், தங்க வயலில் பணியாற்ற சென்ற பல தமிழ் குடும்பங்கள் பல்கி பெருகி ஒரு குட்டி தமிழ்நாடாக மாறிவிட்டதும், பக்தவச்சலம் வெற்றியை எளிதாக்கின.

எம்ஜிஆர் பக்தி
எம்ஜிஆர் மீது தங்கவயல் மக்களுக்கு இருந்த அபார மோகமும், அதிமுக சார்பில் களமிறக்கப்பட்ட பக்தவச்சலம் வெற்றிக்கு வழிகோலியது. அதுமட்டுமல்ல 1989ம் ஆண்டு நடைபெற்ற அடுத்த பொதுத் தேர்தலிலும், பக்தவச்சலம் அதிமுக சார்பில் வெற்றிக்கொடி நாட்டினர். மேலும், 1999ம் ஆண்டு தேர்தலிலும் பக்தவச்சலம் அதிமுக சார்பில் வெற்றி பெற்றார். இதுதவிர கவுன்சிலர் உள்ளிட்ட பல பதவிகளையும் வகித்துள்ளார். தற்போது தேவகவுடாவின் மதசார்பற்ற ஜனதாதளம் கட்சியில் இணைந்து செயல்பட்டு வரும் இவருக்கு, இத் தேர்தலில் அக்கட்சி சார்பில் தங்கவயலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தலைநகரிலும் கொடி நாட்டியது
தங்கவயல் மட்டுமில்லை, தலைநகர் பெங்களூரிலும் அதிமுக வெற்றிக்கொடியை நாட்டிய வரலாறு உண்டு. அதுவும், நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள காந்திநகர் தொகுதியை கைப்பற்றியது அதிமுக. தமிழர்கள் பெருவாரியாக வசிக்கும் இத்தொகுதியில் 1994ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலின்போது, அதிமுக சார்பில் போட்டியிட்ட முனியப்பா வெற்றிவாகை சூடினார். அதற்கு சில வருடம் முன்புதான், காவிரி கலவரத்தின்போது தமிழர்கள் அடித்து விரட்டப்பட்ட கோபம் வாக்குகளாக அறுவடையானது என்றும் சொல்லலாம். ஆனால், அதன்பிறகு நடைபெற்ற தேர்தல்களில் காங்கிரசின் தினேஷ் குண்டுராவ் வெற்றி பெற ஆரம்பித்தார். தொடர்ச்சியாக தற்போதுவரை 4 முறை அவரே வெற்றி பெற்றுள்ளார். தினேஷ்குண்டுராவ் தமிழர்களுடன் இணைந்து பழகி வாக்குகளை ஈர்க்க துவங்கியதால் அதிமுக செல்வாக்கு இங்கே சரிந்துவிட்டது.

இப்போது நடக்குமா மேஜிக்?
இந்த நிலையில்தான், தங்கவயல் மற்றும் காந்திநகர் ஆகிய இரு தொகுதிகளிலும் அதிமுக தற்போது மீண்டும் களம் காண்கிறது. ஆனால், எம்ஜிஆர் காலத்து அதிமுகவோ, அதன் வாக்காளர்களோ இப்போது இவ்விரு தொகுதிகளிலும் இல்லை. அதிமுக பிளவுபட்டுள்ளது. அதைவிட முக்கியமாக கர்நாடக தமிழ் மக்கள் மத்தியில், அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு வாக்களிக்கும் மனநிலை வெகு காலமாகவே இல்லை. தங்களுக்கு ரேஷன் கார்டுகளை பெற்றுத்தரவும், குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும் கர்நாடக கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்களால்தான் முடியும் என இங்குள்ள மக்கள் நம்புகிறார்கள். எனவேதான், தமிழர் பகுதிகளில் காங்கிரஸ் அல்லது பாஜக அல்லது அரிதாக மதசார்பற்ற ஜனதாதள கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமே வெற்றி பெற முடிகிறது.












Click it and Unblock the Notifications