ஒரு வேளை வஜுபாய் வாலா தேவெ கெளடாவைப் பழி வாங்குகிறாரோ??
Recommended Video

பெங்களூரு: 1996ம் ஆண்டு குஜராத்தில் பாஜக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது. அப்போது பிரதமராக இருந்தவர் தேவெ கெளடா. குஜராத் மாநில பாஜக தலைவராக இருந்தவர் வஜுபாய் வாலா.
குஜராத் பாஜக ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டு காங்கிரஸ் ஆதரவுடன் சங்கர் சிங் வகேலா பிறகு ஆட்சியமைத்தார். அன்று நடந்ததற்கு இன்று
பழிவாங்கப்படுகிறதா என்ற சுவாரஸ்யமான கேள்வி எழுந்துள்ளது.
அன்று தேவெ கெளடாவால் குஜராத் பாஜக ஆட்சி வேட்டையாடப்பட்டபோது செய்வதறியாமல் விழித்து நின்ற வஜுபாய் வாலா இன்று தேவெ கெளடாவின் மகன் குமாரசாமி முதல்வராக முடியாத நிலையை ஏற்படுத்துகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அன்று வஜுபாய் செய்வதறியாமல் நின்றது போல இன்று பாஜகவின் அதிவேகத்தை தடுக்க முடியாமல் வேடிக்கை பார்க்கும் நிலைக்கு தேவெ கெளடா தள்ளப்பட்டுள்ளார்.

22 வருடங்களுக்கு முன்பு
22 வருடங்களுக்கு முன்பு நடந்த இந்தக் கதை இப்போது பிளாஷ்பேக்காக பலரின் மனக் கண்களில் மலர்கிறது. அப்போது தேவெ கெளடா பிரதமராக இருந்தார். வஜுபாய் வாலா குஜராத் மாநில பாஜக தலைவராகவும், சுரேஷ் மேத்தா தலைமையிலான பாஜக அரசில் அமைச்சராகவும் இருந்தார். ஆண்டு 1996.

வகேலாவின் துரோகம்
முதல்வர் பதவிக்கு அப்போது ஆசைப்பட்டுக் கொண்டிருந்தார் மூத்த பாஜக தலைவர் சங்கர் சிங் வகேலா. அதற்குத் தூபம் போட்டது காங்கிரஸ். அவரைத் தூண்டி விட்டது. பாஜகவுக்கு எதிராக புரட்சி செய்தார் வகேலா. அவருக்கு ஆதரவாக 40 பாஜக எம்எல்ஏக்கள் திரண்டனர். 182 பேர் கொண்ட குஜராத் சட்டசபையில் பாஜக விடம் 121 எம்எல்ஏக்கள் அப்போது இருந்தனர்.

உத்தரவிட்ட ஆளுநர்
முதல்வர் சுரேஷ் மேத்தாவை சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்குமாறு உத்தரவிட்டார் ஆளுநர். ஆனால் சட்டசபையில் வாக்கெடுப்புக்கு முன்பாக பெரும் அடிதடி ஏற்பட்டது. உறுப்பினர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

மூக்கை நுழைத்த கெளடா
இதையடுத்து மத்தியில் ஆட்சியில் இருந்த ஜனநாயக முன்னணி அரசு தலையிட்டது. பிரதமராக இருந்த தேவெ கெளடா, குஜராத் ஆட்சியைக் கலைக்க குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவுக்குப் பரிந்துரைத்தார். சங்கர் தயாள் சர்மாவும் உடனடியாக டிஸ்மிஸ் செய்தார். குஜராத் பாஜக அரசு வீழ்த்தப்பட்டது.

கெளடா மீது பாய்ந்த வாஜ்பாய்
இதையடுத்து அடல் பிகாரி வாஜ்பாய், தேவெ கெளடாவை கடுமையாக குற்றம் சாட்டிப் பேசினார். குஜராத் விவகாரத்தில் தான் தலையிட மாட்டேன் என்று கெளடா எனக்கு உறுதியளித்திருந்தார். ஆனால் அதை மீறி துரோகம் செய்து விட்டார். காங்கிரஸின் தூண்டுதலால்தான் கெளடா குஜராத் பாஜக அரசை கலைத்துள்ளார் என்றும் குற்றம் சாட்டினார் வாஜ்பாய்.
|
கெளடாவுக்கு நேரம் சரியில்லை
இன்று கெளடாவுக்கு இது திரும்பியுள்ளது. வஜுபாய் வாலா இன்று கர்நாடகத்தின் முதல்வர். குமாரசாமி முதல்வர் பதவிக்குக் காத்திருந்தும் கூட எடியூரப்பாவை முதல்வராக அழைக்கிறார் வஜுபாய் வாலா. செய்வதறியாமல் வேடிக்கை பார்க்கும் நிலையில் தேவெ கெளடா.












Click it and Unblock the Notifications