வயநாடு அல்லது ரேபரேலி, எந்த தொகுதியை ராஜினாமா செய்கிறார் ராகுல் காந்தி? அவரே சொன்ன பதில்
டெல்லி: ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரு தொகுதிகளிலும் காங்கிரஸ் சீனியர் தலைவர் ராகுல் காந்தி வென்றுள்ள நிலையில் இரண்டில் எந்த தொகுதியில் அவர் எம்பியாக தொடர்வார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இன்று மாலை நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் இதுபற்றி கூறியதாவது "இது அரசியலமைப்பைக் காப்பாற்றுவதற்கான போராட்டம், அதில் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. மோடியும் அமித் ஷாவும் நாட்டை ஆள்வதை நாடு விரும்பவில்லை. அவர்கள் அரசியலமைப்பை சீர்குலைப்பதை மக்கள் விரும்பவில்லை. என்றார்.

இதனிடையே ராகுல் பேட்டியளித்த நேரத்தில், ரேபரேலியில் அவர் பாஜகவின் தினேஷ் பிரதாப் சிங்கை விட 389,341 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். வயநாட்டில், அவர் 364,422 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அன்னி ராஜாவை எதிர்த்து ராகுல் அங்கு 647,445 வாக்குகள் பெற்றார்.
2019ல் ராகுல் காந்தி வயநாட்டில் வெற்றி பெற்றார் ஆனால் அமேதியில் தோல்வியடைந்தார். எனவே இரண்டில் எந்த சீட்டில் தொடர்வது என்ற சிக்கல் எழவில்லை.
இப்போது எந்த தொகுதியில் எம்பியாக தொடர்வீர்கள் என்ற நிருபர்கள் கேள்விக்கு பதிலளித்த ராகுல், வயநாடு மற்றும் ரேபரேலி இடையே எந்த தொகுதியை வைத்துக்கொள்வது என்பதை நான் இன்னும் முடிவு செய்யவில்லை என்றார் அவர். இந்தியத் தேர்தல் விதிகளின்படி, இரண்டு இடங்களில் வெற்றி பெறும் வேட்பாளர், ஒரு இடத்தில் ராஜினாமா செய்ய வேண்டும். கைவிடப்பட்ட தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும்.












Click it and Unblock the Notifications