என்னதான் ஆட்சிகள் மாறினாலும்... நேர்மையாளர்களை சோதிக்கும் காட்சி மட்டும் மாறவே மாறாது!
சண்டிகர்: சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா நில மோசடி செய்ததாக ஆவணங்கள் மூலம் பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறிய மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அசோக் கெம்கா 45 ஆவது முறையாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
போக்குவரத்து துறை ஆணையர் பதவியிருந்து தகுதி குறைவான தொல்லியல் மற்றும் அருங்காட்சியகங்கள் துறை செயலாளராக கெம்கா மாற்றப்பட்டுள்ளார்.
கெம்காவை அரசுத் தரப்பு பழிவாங்குவது இது முதல் முறையல்ல. அவர் டிரான்ஸ்பர் ஆகாமல் இருந்தால்தான் ஆச்சரியம். அந்த அளவுக்கு ஆட்சியாளர்களுக்கு இவரைக் கண்டாலே பிடிக்காது. காரணம் அதிரடியாக, முகத்தில அடித்தாற் போல செயல்படுபவர் கெம்கா. நேர்மையானவரும் கூட.

போக்குவரத்து ஆணையராக பொறுப்பேற்றதிலிருந்து அளவுக்கு அதிகமாக பாரங்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதித்துள்ளார் கெம்கா.
இதனால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி கெம்காவை இடமாற்றம் செய்ததுடன், போக்குவரத்து அமைச்சர் ராம் பிலாஸ் ஷர்மாவிடமிருந்து பாரங்களை ஏற்றிச்செல்வதற்கான விதிமுறைகளையும் அடுத்த ஒரு வருடத்திற்கு தளர்த்திவிட்டனர்.
ஹரியானா முதல்வராக கத்தார் பொறுப்பேற்ற போது தான் கெம்கா போக்குவரத்து ஆணையராக நியமிக்கப்பட்டார். கெம்காவை போலவே முதல்வரின் கூடுதல் தனி செயலாளரான சுமிதா மிஸ்ராவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில்தான் கடுமையான சோதனைக்குள்ளாக்கப்பட்டார் கெம்கா என்றால் இப்போது பாஜக ஆட்சியிலும் கூட அவரை அதே போலத்தான் ஆட்சி வட்டம் பார்க்கிறது என்பது வேதனைக்குரியது.












Click it and Unblock the Notifications