கெஜ்ரிவாலை அடிக்க மர்ம நபருக்கு ரூ.25 ஆயிரம் கொடுத்தது யார்?
டெல்லி: ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை அடித்தவருக்கு யாரோ ரூ. 25 ஆயிரம் கொடுத்தது தெரிய வந்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் தெற்கு டெல்லியில் உள்ள தக்ஷின்புரி பகுதியில் இன்று பிரச்சாரம் செய்தார். திறந்த ஜீப்பில் வந்த அவரை அடையாளம் தெரியாத ஒருவர் திடீர் என்று தாக்கினார்.
அந்த நபர் கெஜ்ரிவாலின் கழுத்தில் இரண்டு குத்துவிட்டதுடன் அறையவும் செய்தார். இதையடுத்து அந்த நபரை ஆம் ஆத்மி கட்சியினர் பிடித்து அடித்து உதைத்தனர். அதன் பிறகு அவர் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் கெஜ்ரிவாலை அடிக்க அந்த நபருக்கு ரூ.25 ஆயிரம் கொடுக்கப்பட்டதாக இந்திய டுடேவின் இந்தி செய்தி தொலைக்காட்சியான ஆஜ் தக்கின் துணை ஆசிரியர் நிஷாந்த் சதுர்வேதி ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
அவரின் ட்வீட்டை கெஜ்ரிவால் ரீட்வீட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.