கன்னட அமைப்புகளை பற்றி கவலைப்படாமல் காலா ரிலீசுக்கு தேதி குறித்த கனகபுரா சீனிவாஸ்! யார் இவர்?
Recommended Video
பெங்களூர்: காலா திரைப்படத்தை கர்நாடகாவில், 130 தியேட்டர்களில் ரிலீஸ் செய்வேன் என்று தில்லாக அறிவித்துள்ளார் பிரபல வினியோகஸ்தர் சீனிவாஸ்.
கனகபுரா சீனிவாஸ் என்று ஊர் பெயரையும் சேர்த்து சொன்னால் கர்நாடகாவிலுள்ள குழந்தைகளுக்கும் இவரை பற்றி தெரியும். அந்த அளவுக்கு சினிமா துறையில், பிரபலமானவர் கனகபுரா சீனிவாஸ்.
ராம்நகர் மாவட்டம் கனகபுராவை சேர்ந்த இவர், எந்த சர்ச்சைகள் வந்தாலும், திரைப்படத்தை ரிலீஸ் செய்வதில் கவனமாக இருக்க கூடியவர். இப்படித்தான் பாகுபலி 2 திரைப்படம் வெளியான நேரத்திலும் கன்னட அமைப்பினர் பிரச்சினை செய்தனர்.
பாகுபலி 2 பிரச்சினை
படத்தில் நடித்திருந்த சத்தியராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும், அல்லது, பாகுபலி 2 படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டோம் என்று எச்சரித்தனர். இந்த படத்தையும் கனகபுரா சீனிவாஸ்தான் கர்நாடகாவில் வினியோகம் செய்தார்.
ஜாதி ஆதரவு இல்லை
ஜாதிக்கு தனி செல்வாக்குகளை கொண்டிருக்கும் கர்நாடகாவில், இத்தனைக்கும் பெரிய அளவுக்கான ஜாதி பலம் இல்லாதவர்தான் கனகபுரா சீனிவாஸ். சிறு அளவிலான சமூகமாக உள்ள 'கொல்ரு' என்ற ஜாதி பிரிவை சேர்ந்தவர் இவர். இருப்பினும் கன்னட அமைப்பினரின் எச்சரிக்கையை மீறி காலா திரைப்படத்தை, 130 திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய தயார் என அறிவித்துள்ளார் கனகபுரா சீனிவாஸ்.
ஹைகோர்ட் ஆதரவு
காலா திரைப்படத்தை காண்பிக்கும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பை வழங்க வேண்டியது கர்நாடக அரசின் கடமை என்று, அம்மாநில ஹைகோர்ட் நேற்று உத்தரவிட்ட நிலையில், துணிந்து களமிறங்குகிறார், கனகபுரா சீனிவாஸ்.
பின்வாங்கிய நிறுவனம்
ஏற்கனவே காலா படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்த வினியோக நிறுவனம் கொல்டி ஃப்லிம்ஸ், கன்னட அமைப்பினர் எச்சரிக்கையால் தங்கள் முடிவை வாபஸ் பெற்ற நிலையில், துணிச்சலாக இந்த முடிவை எடுத்துள்ளார் கனகபுரா சீனிவாஸ்.