உ.பி. கைரானா பதற்றத்துக்கு காரணமான ரவுடி 'முகீம் காலா' யார்?
லக்னோ: உத்தரப்பிரதேசத்தின் கைரானாவில் பதற்றத்தை உருவாக்கி பொதுமக்கள் இடம்பெயர்வதற்கு காரணமான முகீம் காலா குறித்த தகவல்களை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக உள்ள கைரானா பகுதியில் 350 இந்து குடும்பங்களை உள்ளூர் ரவுடி முகீம் காலா தலைமையிலான கும்பல் வெளியேற்றியிருக்கிறது என பாஜக எம்.பி. ஹூக்கும்சிங் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.

ஆனால் இந்து குடும்பங்கள் மட்டுமின்றி 115 முஸ்லிம் குடும்பங்களும் கைரானாவில் வெளியேறி இருக்கிறது என உள்ளூர் நிர்வாகம் தெரிவித்தது. கைரானாவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்கள் என ஹூக்கும்சிங் வெளியிட்ட 119 பேர் பட்டியலில் 5 ஆண்டுகளுக்கு முன்னரே 66 பேர் வெளியேறிவிட்டனர்; அப்போது முகீம் காலா தலையெடுக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியிருந்தது. மேலும் லோக்சபா தேர்தலின் போது முசாபர்நகரில் வன்முறை வெடித்த போதும் கூட கைரானா அமைதியாகத்தான் இருந்தது என்றும் உள்ளூர் நிர்வாகம் விளக்கம் அளித்தது.
இந்த சர்ச்சைகளுக்கு காரணமாக முகீம் காலா தற்போது சிறையில் உள்ளான். 2010-ம் ஆண்டு முதல் வழிப்பறியில் ஈடுபட்டு குற்றங்களை செய்யத் தொடங்கி பின்னர் தனக்கென ஒரு கோஷ்டியையும் உருவாக்கிக் கொண்டான். தற்போது இந்த கோஷ்டியில் 25 பேர் உள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் மட்டுமின்றி ஹரியானாவிலும் முகீம் காலா மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
பொதுமக்களிடம் மாமூல் வசூலிப்பது; பணம் தராதவர்களை போட்டுத் தள்ளுவது என தொடர்ச்சியான அராஜகங்களில் ஈடுபட்டது முகீம் காலா கோஷ்டி. இவர்களுக்கு பயந்து ஊரை காலிசெய்துவிட்டு போனவர்களும் உண்டு என கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு முகீம் காலாவும் அவனது கோஷ்டியைச் சேர்ந்த 24 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் ஒருவன் சிறையில் இருந்து தப்பி இருக்கிறான். இவர்களது கிரிமினல் நடவடிக்கைகளுக்கு மத ரீதியான ஆதரவு எதுவும் இல்லை என்பதுடன் இவர்கள் சார்ந்த மதத்தைச் சேர்ந்த முஸ்லிம்களே பாதிக்கப்பட்டுள்ளனர் என்கின்றனர் உள்ளூர் போலீசார்.












Click it and Unblock the Notifications