இடஒதுக்கீட்டை கெடுத்து.. மண்டல் கமிஷனை முடக்கியவரே ராஜிவ் காந்திதான்.. ராகுலுக்கு அமித்ஷா பதிலடி
ஜெய்ப்பூர்: ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து பேசும் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தந்தை ராஜீவ் காந்திதான் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மண்டல் கமிஷனை முடக்கியவர் என பதிலடி கொடுத்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.
ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இன்று மாலையுடன் ராஜஸ்தானில் தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. இந்த நிலையில் ஜெய்ப்பூரில் செய்தியாளர்களிடம் அமித்ஷா இன்று கூறியதாவது:

காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் ராஜஸ்தான் மக்கள் மிகவும் துயரத்தை அனுபவித்து வருகின்றனர். ராஜஸ்தான் மக்கள் பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசின் நலத் திட்டங்களை நம்புகின்றனர். பெண்கள், தலித்துகளை பாதுகாக்க தவறிவிட்டது ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை மட்டும் திருப்திபடுத்துகிற அரசியலை காங்கிரஸ் செய்து வருகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் பல இடங்களில் திட்டமிட்ட வன்முறைகள் நடத்தப்பட்டன. ஆனால் வன்முறையாளர்கள், குற்றவாளிகள் மீது எந்த ஒரு நடவடிக்கையுமே எடுக்கப்படவில்லை.
ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.தானே ரெட் டைரி பற்றி பேசினார்? அவர் பேசவில்லை எனில் ரெட் டைரி பற்றி பாஜக ஏன் பேசப் போகிறது? அதென்ன ரெட் டைரி என்பதை விளக்குமா காங்கிரஸ்?
பணி நியமனங்களுக்கான தேர்வுகளில் வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகி இளைஞர்களின் வேலைவாய்ப்பு பறிக்கப்பட்டிருக்கிறது. வினாத்தாள் கசிந்த வழக்குகளில் ஆக்கப்பூர்வமான எந்த ஒரு நடவடிக்கையையும் ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் மேற்கொள்ளவே இல்லை. பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பு மக்களுமே ராஜஸ்தானின் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடியை தரக்குறைவாக காங்கிரஸ் விமர்சிக்கிறது. ராகுல் காந்தி விமர்சிக்கிறார். நீங்கள் எப்போது எல்லாம் பிரதமர் மோடியை இழிவுபடுத்துகிறீர்களோ அப்போது எல்லாம் உங்களுக்கு தக்க பதிலடி கிடைக்கிறது. இப்போது ராஜஸ்தான் மாநில மக்களும் தேர்தல் மூலம் காங்கிரஸுக்கு பதிலடி தரப் போகின்றனர்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு பற்றி ராகுல் காந்தியும் காங்கிரசும் பேசுகிறது. பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு பணிகளில் இட ஒதுக்கீடு வழங்க வகை செய்த மண்டல் கமிஷன் அறிக்கையை முடக்கியது யார்? ராகுல் காந்தியின் தந்தை ராஜீவ் காந்திதானே?
ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட், மார்வாரிகளை தோற்கடிக்க குஜராத்திகள் விரும்புகின்றனர் என்கிறார். எங்களைப் பொறுத்தவரை அனைவருமே பாரத மாதாவின் புதல்வர்கள்தான். இவ்வாறு அமித்ஷா கூறினார்.












Click it and Unblock the Notifications