ஜெ. மரண தருவாயில் வெண்டிலேட்டரை எடுக்க அனுமதித்தது யார்? மைத்ரேயன் கிடுக்கிப்பிடி கேள்வி
உயிர் பிரியும் நேரத்தில், ஜெயலலிதாவுக்கு பொருத்தப்பட்ட, வென்டிலேட்டரை அகற்ற அனுமதித்தது யார்? என்று மைத்ரேயன் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வெண்டிலேட்டரை அகற்ற அனுமதி கொடுத்தது யார் என்பது குறித்தும் விசாரணையில் தெரியவரும் என்று அதிமுக ராஜ்யசபா எம்.பி மைத்ரேயன் நம்பிக்கை தெரவித்துள்ளார்.
டெல்லியில் குடியரசு தலைவரை சந்தித்த மைத்ரேயன் தலைமையிலான 12 ஓ.பி.எஸ் ஆதரவு எம்.பிக்கள், சந்தித்து ஜெயலலிதா மரணம் குறித்து உரிய விசாரணை தேவை என வலியுறுத்தினர்.
பிறகு நிருபர்களிடம் மைத்ரேயன் கூறுகையில், ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. 75 நாட்களாக யாரையுமே பார்க்க அனுமதி தரவில்லை. நானும் ஒரு டாக்டர்தான். அதிலும், ரத்த புற்றுநோய் சிகிச்சையில் ஸ்பெஷலிஸ்ட் நான். செப்டிசீமியா நோயால் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க யாரையுமே அனுமதிக்க கூடாது என்பதெல்லாம் பொய். எனவே ஜெயலலிதாவை யாரையுமே சந்திக்கவிடாமல் தடுத்தது ஏன்? என்று புரியவில்லை. அப்பல்லோவில் இதற்கு முன்பு எந்த நோயாளியையும் இப்படி தனிமைப்படுத்தி வைக்கவில்லை.
திடீரென டிசம்பர் 4ம் தேதி ஜெயலலிதாவுக்கு, மாரடைப்பு என்று கூறினர். இதன்பிறகு உயிர் பிரியும் நேரத்தில், ஜெயலலிதாவுக்கு பொருத்தப்பட்ட, வென்டிலேட்டரை அகற்ற அனுமதித்தது யார்? பொதுவாக இந்த அனுமதியை நோயாளியின் ரத்த சம்மந்தம் கொண்டவர்கள்தான் எடுக்க வேண்டும். அவ்வாறு அனுமதித்தது யார்? ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது மரணமடைந்தார். எனவே அவர் சீரியசாக இருந்தபோது, அவரின் அமைச்சரவையில் 2வது இடத்தில் இருந்த ஓ.பி.எஸ் உள்ளிட்டோரிடம் மருத்துவமனை நிர்வாகம் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். அதையும் செய்யவில்லை. எனவே இதுகுறித்து உரிய விசாரணை தேவை. எந்த மாதிரி விசாரணை என்பதை குடியரசு தலைவர் முடிவு செய்வார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications