ஜனாதிபதி தேர்தல்.. பொது வேட்பாளரை களமிறக்க எதிர்க் கட்சிகள் திட்டம் !
நடைபெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி: ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில் அந்த பதவிக்கு பாஜகவுக்கு எதிராக பொது வேட்பாளரை நிறுத்தும் முயற்சிக்கு 9 கட்சிகள் ஆதரவு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் வரும் ஜூலை மாதத்துடன் முடிவடைய உள்ளது. அப்பதவிக்கான வேட்பாளர் குறித்து மத்தியில் ஆளும் பாஜக அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர், அனைத்து கட்சியினராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியவராக இருக்க வேண்டும். யாரும் ஆட்சேபம் தெரிவிக்காமலும் இருக்க வேண்டும் என்பது பாஜகவின் திட்டம். எனவே ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலை தயார் செய்யும் பணிகளை பாஜக இப்போதே தொடங்கியுள்ளது.
இருப்பினும் பாஜக சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரே வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது. ஏனேனில் 16 மாநிலங்களில் தனியாகவோ, கூட்டணியாகவோ பாஜகவுக்கு செல்வாக்கு உள்ளது. 5 மாநிலங்களில் மட்டும் காங்கிரஸ் அதிகாரத்தில் உள்ளது. கேரளா, திரிபுராவில் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரிகளும், தமிழ்நாடு, தெலுங்கானா உள்ளிட்ட இதர மாநிலங்களில் ஏனைய கட்சிகளும் உள்ளன.
இந்த நிலையில் பாஜகவுக்கு போட்டியாக பலம் வாய்ந்த பொது வேட்பாளரை நிறுத்தலாம் என்று எதிர்கட்சிகள் சிலர் கூறிவருகின்றனர். இதற்கான முயற்சிகளில் ஐக்கிய ஜனதா தளம், மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகள் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. காங்கிரஸ் தலைவர் சோனியாவை சந்தி்த்து இந்த முயற்சிக்கு ஆதரவும் திரட்டப்பட்டுள்ளது.
பாஜக அல்லாத 13 மாநிலங்களில் இருக்கும் பலத்தை வைத்து பொது வேட்பாளரை வெற்றி பெற வைக்கும் இந்த முயற்சிக்கு இதுவரை 9 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக எதிர்க்கட்சிகள் சேர்ந்து பொது வேட்பாளரை அறிவிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ் கூறினார்.












Click it and Unblock the Notifications