திணறும் பாஜக.. டஃப் தரும் காங்கிரஸ்.. இதற்கு நடுவே கெஜ்ரிவால்.. கோவா மாநில தேர்தல் பரபரப்பு
கோவாவில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது
பனாஜி: 5 மாநில தேர்தல் முடிவுகள் எப்படி இருக்க போகிறது என்ற எதிர்பார்ப்பு இருந்தாலும், கோவாவை யார் பிடிக்க போகிறார்கள் என்ற ஆவலே அதிகமாகி உள்ளது.
மொத்தம் 40 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ள கோவா மாநிலத்தில், வரும் 14 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில், காங்கிரஸ் - பாஜக - டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி - மேற்கு வங்க மாநில முதலமைச்சர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.

கோவா தேர்தல்
கோவா தேர்தல் களம் இப்போதைக்கு எப்படி உள்ளது என்றால், யாருக்குமே மெஜாரிட்டி கிடைக்காத நிலைமைதான் உள்ளது போல தெரிகிறது. அந்த அளவுக்கு உட்கட்சி பூசல் தலைவிரித்தாடுகிறது.. பாஜகவில் இருந்து பல முக்கிய தலைகள் காங்கிரஸ் பக்கம் ஜம்ப் ஆகிவிட்டனர்.. அதிலும் அமைச்சர் மைக்கேல் லோபோ, விலகியது அக்கட்சிக்கு பெரும் மைனஸாக பார்க்கப்படுகிறது.

சீனியர்கள்
அதேபோல, சீனியர்களுக்கு சீட் தராத பஞ்சாயத்தும் பாஜகவில் உள்ளது.. மனோகர் பாரிக்கர் மகன் உத்பல் பாரிக்கருக்கு சீட் தராமல் போகவும், அவர் கட்சியில் இருந்து விலகியதுமே, அரவிந்த் கெஜ்ரிவால் நூல் விட்டு பார்த்தார்... தங்கள் கட்சிக்கு வருமாறும் அழைத்தார். ஆனால், சுயேச்சையாக பனாஜி தொகுதியில் போட்டியிடுகிறார்... இதற்கு நடுவில் கூட்டணியிலிருந்து மாநிலக் கட்சிகளும் விலகி தனியாக போய்விட்டன.. இது எல்லாவற்றிற்கும் மேல், கொரோனா பாதிப்பு, சுற்றுலா துறை பாதிப்பு போன்றவையால் வேலைவாய்ப்பின்மை உட்பட பாஜக மீது மக்களுக்கு கோபம் உள்ளது. அதனால் பெரிய அளவுக்கு பாஜகவுக்கு ஆதரவு இங்கு இப்போதைக்கு இல்லை.

ராகுல் காந்தி
இதைதான் காங்கிரஸ் அறுவடை செய்ய போகிறது.. ராகுல்காந்தி நேற்று அங்கு பேசும்போது, "சுரங்கத்தை நிலையான மற்றும் சட்டபூர்வமான முறையில் மீட்டெடுக்க திட்டமிட்டு உள்ளோம். இந்த முறை அறுதிப் பெரும்பான்மை பெற்று, கோவாவில் ஆட்சி அமைப்போம்... ஆட்சி அமைத்ததும் உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுப்போம்" என்று உறுதி தந்துள்ளார். எனினும், காங்கிரஸை பொறுத்தவரை, 2017-க்கு பிறகு அக்கட்சி கரைந்துவிட்டது.. ஏராளமான தலைவர்கள் சொல்லி வைத்தாற்போல் வேறு கட்சிக்கு தாவி கொண்டிருக்கிறார்கள்..

பாஜக
மாற்று கட்சியில் இருந்து காங்கிரசுக்கு சிலர் வந்தாலும், கைமீறி போனவர்கள் அத்தனை பேரும் பெரும் புள்ளிகள்தான்.. இருந்தாலும் ஒரே ஆறுதல், போன முறை பாஜகவுடன் இருந்த கோவா முன்னணி இந்த முறை காங்கிரசுடன் இணைந்துள்ளது.. இது எந்த அளவுக்கு ஒர்க் அவுட் ஆகுமோ தெரியவில்லை. இதற்கு நடுவில் கெஜ்ரிவாலும், மம்தாவும், தேசியவாதமும் டஃப் தந்து கொண்டிருக்கிறார்கள்.. டெல்லி மாடல் என்று கெஜ்ரிவால் பிரச்சாரம் செய்கிறார்.. தேசிய தலைவராக உருவெடுத்து வரும் மம்தாவின் பிரச்சாரமோ பாஜகவை கதற வைத்து கொண்டிருக்கிறது...

பாஜக
பாஜக மீது குற்றஞ்சாட்டி காங்கிரஸ் வாக்கு சேகரித்து கொண்டிருந்தால், புதுபுது அறிவிப்புகளை வெளியிட்டு பாஜக வாக்கு சேகரித்து கொண்டிருக்கிறது.. பிரதமர் மோடி இங்கு பேசும்போது, "விவசாயிகளின் கவுரவத்தை பாஜகதான் மீட்டு தந்தது.. பல வருடமாக பூட்டப்பட்டிருந்த கோரக்பூர் ஆலையை நாங்க தான் திறந்து வைத்தோம்... பொதுமக்களை தவறாக வழிநடத்துகிற தலைவர்களே இன்று இருக்கின்றனர்... அவர்களால் உங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டதா? என்று அவர்களிடமே கேளுங்கள்" என்று மோடி பேசிய பேச்சு எதிர்க்கட்சிகளை கலங்கடிக்கவே செய்தது.

கிறிஸ்தவர்கள்
இப்படி கோவா களமே அனலடித்து கொண்டிருந்தாலும், இங்கு கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகிறார்கள்.. இவர்கள்தான் ஓட்டுக்களை தீர்மானிப்பவர்கள்.. பாஜக, காங்கிரஸ் கட்சிக்கான ஆதரவு சமமாகவே இப்போதைக்கு இருப்பதால், அநேகமாக ஆம் ஆத்மிதான், ஓட்டுக்களை பிரித்து வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் கட்சியாக திகழ போகிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.












Click it and Unblock the Notifications