இவர் மட்டும்தான் பிரச்சனை.. வளர்ந்து நிற்கும் மமதா.. வங்கத்தை விடாமல் குறி வைக்கும் மோடி!
Recommended Video
கொல்கத்தா: இந்த லோக்சபா தேர்தலில் மற்ற மாநிலங்களை விட மேற்கு வங்க மாநிலத்திற்கு பாஜக அதிக முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறது. பல்வேறு காரணங்களை மனதில் வைத்து பாஜக இப்படி செயல்படுவதாக கூறுகிறார்கள்.
இந்த லோக்சபா தேர்தலில் பிரதமர் மோடி இதுவரை 115 தேர்தல் பிரச்சார கூட்டங்களை நடத்தி இருக்கிறார். அதில் உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், ஒடிசாவில்தான் அதிக அளவில் மோடி பிரச்சாரம் செய்துள்ளார்.
சரியாக சொல்ல வேண்டும் என்றால், மோடி மொத்தம் 68 பிரச்சாரங்களை இந்த மூன்று மாநிலங்களில் மட்டும் செய்துள்ளார். கிட்டத்தட்ட இது 50%க்கும் அதிகமானது. இதில் மேற்கு வங்கத்தின் மீதுதான் மோடி மிக அதிக கவனம் செலுத்தி உள்ளார்.

மோடி மமதா
பிரதமர் மோடி இந்த லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கம் மீது அதிக கவனம் செலுத்த நிறைய காரணங்கள் உள்ளது. மோடி அதிக கோபமாக பேசியதும், அதிக வெறுப்புடன் பேசியதும், மிக கடுமையான புகார்கள் வைத்ததும், சர்ச்சைகளை உருவாக்கியது மேற்கு வங்க பிரச்சாரத்தில்தான். மற்ற மாநிலங்களை விட மேற்கு வங்க பிரச்சாரம் அதிக திட்டமிட்டு பாஜகவால் நடத்தப்பட்டு உள்ளது.

ஏன் இப்படி
பாஜக மேற்கு வங்கத்தை அதன் அகண்ட பாரத கனவிற்கு இடையூறாக பார்க்கிறது. இந்தியாவில் இருக்கும் மாநில தலைவர்களில் மிக மிக வலுவானவர் மமதா பானர்ஜிதான். திமுக ஆட்சியில் இல்லை, மாயாவதி, அகிலேஷ் யாதவ் ஆட்சியில் இல்லை. சந்திரசேகர ராவ் நட்பானவர். சந்திரப்பாபு நாயுடு தோல்வி அடைய வாய்ப்புள்ளது. இதனால் மமதா மட்டுமே தற்போது மோடிக்கு பெரிய இடைஞ்சலாக இருக்கிறார்.

நாளுக்கு நாள் வலுப்பெறுகிறார்
இதில் மமதா பானர்ஜி மாநில தலைவர் என்பதையும் தாண்டி தேசிய அளவில் தலைவராக உருவெடுத்துக் கொண்டு இருக்கிறார். கொல்கத்தா கமிஷனர் ராஜீவ் குமார் விவகாரத்திலேயே மத்திய அரசின் கண்ணில் மமதா பானர்ஜி விரலை விட்டு ஆட்டினார். அப்போது இவர் நடத்திய தர்ணா பெரிய அளவில் வைரலானது. மாநில தலைவர்கள் எல்லோரும் இவருக்காக அணி திரள தொடங்கினார்கள்.

அதனால்தான் தேர்தல்
அதனால்தான் தற்போது மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரங்களை திட்டமிட்டு பாஜக நடத்தி வருகிறது. தேர்தலுக்கு 6 மாதங்களுக்கு முன்பே அங்கு ரதயாத்திரை நடத்த பாஜக திட்டமிட்டதற்கு கூட இதுதான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அதற்கு எல்லாம் மமதா அனுமதி அளிக்கவில்லை என்பது வேறு கதை. அதை தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக செயல்படுத்தி வருகிறது.

அதிக கலவரம்
இந்த வருடம் தேர்தல் பிரச்சாரத்தின் போது அதிக கலவரம் நடந்ததும் இங்குதான். தேர்தலின் போது கூட திரிணாமுல் மற்றும் பாஜகவினர் இடையே பிரச்சனை நிகழ்ந்து கொண்டே இருந்தது. அதாவது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு மாற்று கம்யூனிஸ்ட் இல்லை, பாஜகதான் என்று அக்கட்சி அங்கு நிரூபிக்க முயல்கிறது.

மமதாவின் கனவு
மமதாவிற்கு இந்திய பிரதமராகும் கனவு இருக்கிறது. இவரின் இந்த கனவுதான் மோடியின் தூக்கத்தை கெடுப்பதாக சொல்கிறார்கள். மமதாவை முதலில் மாநில முதல்வர் பதவியில் இருந்து அகற்ற வேண்டும் என்று பாஜக திட்டமிட்டு உள்ளது. இதற்காக ஒரு முன்னோட்டமாக பாஜக இந்த லோக்சபா தேர்தலை கையில் எடுத்து இருப்பதாக தகவல்கள் வருகிறது.

ஆனால் என்ன நடக்கும்
அதே சமயம் மோடி போடும் எல்லா யார்க்கர் பாலிலும் மமதா அசால்ட்டாக சிக்ஸர் விளாசுகிறார். கொல்கத்தாவில் நடந்த கலவரத்தை கூட மிக நேர்த்தியாக அவர் கையாண்டார் என்றுதான் கூற வேண்டும். இந்த லோக்சபா தேர்தலில் மேற்கு வங்கத்தில் அவர் 30 இடங்களுக்கு மேல் கைப்பற்றிவிட்டால், அதன்பின் அவரது அரசியல் பாதையே வேறு மாதிரி மாறிவிடும் என்றுதான் கூறவேண்டும்.












Click it and Unblock the Notifications