சிம்பிள்.. காளையை பட்டியலிலிருந்து நீக்க வேண்டும்.. மக்களை இனியும் ஏமாற்றாமல் செய்யுமா மத்திய அரசு?
டெல்லி: இப்போதுள்ள சூழ்நிலையில், ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக காட்சி பட்டியலில் இருந்து காளை மாட்டை நீக்கி அவசர சட்டத்தை மத்திய அரசு பிறப்பிப்பது மட்டுமே ஒரே தீர்வு என சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் பதவியிலிருந்தபோது, 2011ம் ஆண்டு காளை மாடு காட்சி விலங்குகள் என்ற பிரிவில் சேர்க்கப்பட்டது. அரசாணை மூலம் தான் இப்படி ஒரு மாற்றத்தை அப்போதைய அரசு கொண்டு வந்தது.
இதனால் காளையை வைத்து நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு தடை வந்தது. இது ஒரு தமிழர் துரோக நடவடிக்கை என்பதில் மாற்றுக்கருத்துக்கே இடமில்லை. ஆனால் காங்கிரஸ்-திமுக கூட்டணி செய்த தவறுக்காக மக்கள் அவர்களை தொடர்ந்து தண்டித்து வருகிறார்கள். மாநிலத்தில் அதிமுகவுக்கும், மத்தியில் பாஜகவுக்கும் ஆட்சியமைக்கதான் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

என்ன காரணம்?
2014ல் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தபோது முதல் இப்போதுவரை மாநிலத்தில் அதிமுக அரசுதான் ஆட்சியில் உள்ளது வகிக்கிறது. மத்திய அரசிடம் கோரிக்கைவிடுத்து காட்சி பட்டியலில் இருந்து காளையை நீக்க ஒரு அரசாணையை பிறப்பிக்க வைக்க மாநில அதிமுக அரசால் இத்தனை வருடமாக முடியவில்லை என்பது ஏன்? இதன் பின்னணியில் இருப்பது என்ன? என்ற சந்தேகம் எல்லோருக்கும் உள்ளது.

எங்கே போனார்கள்?
அதிமுக அரசுக்குத்தான் அக்கறையில்லை என்று வைத்துக்கொண்டாலும், ஜல்லிக்கட்டு நடத்தியே தீருவோம் என கீறல் விழுந்த ரெக்கார்டு போல திரும்ப திரும்ப கூறிவரும், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக தமிழக நிர்வாகிகள் தமிழிசை, ஹெச்.ராஜா போன்றோர் ஏன் அரசாரணை பிறப்பிக்க மத்திய அரசை வலியுறுத்தவில்லை?

நாடாளுமன்றம் கூடியதே
காங்கிரஸ் அரசில், எப்படி அரசாணை மூலம் விலங்குகள் பட்டியலில் காளை சேர்க்கப்பட்டதோ, அதே அரசாணை மூலம் அப்பட்டியலில் இருந்து காளையை நீக்க முடியும் என்கின்றனர் சட்ட வல்லுநர்கள். சட்ட திருத்தம் கூட அவசியப்படாது என்பது சட்ட வல்லுநர்கள் கருத்தாக உள்ளது. சட்ட திருத்தம் தேவை என வைத்துக் கொண்டாலும்கூட, நாடாளுமன்றம் எத்தனையோ முறை கூடியும் கூட சட்டத் திருத்தத்தை ஏன் இதுவரை பாஜக அரசு நிறைவேற்றவில்லை? அதற்கான நெருக்கடியை தமிழக கட்சிகள் ஏன் தரவில்லை?

மக்கள் முட்டாள்களா?
ஜல்லிக்கட்டு நெருங்கும் நேரத்தில் எதிர்க்கட்சிகள் ஆள்பவர்களை குற்றம்சாட்டுவதும், ஆள்பவர்கள் முன்பு செய்த தப்பை சுட்டிக் காட்டுவதும் ஆண்டுதோறும் காணும் கூத்து. மக்களை எந்த அளவுக்கு முட்டாள்களாக கருதினால் இவர்களால் இப்படி தொடர்ந்து கேம் ஆட முடியும் என்பதை நினைத்து பார்த்துக்கொள்ளுங்கள். மக்களின் மறதியும், அசட்டைத்தன்மையும் இந்த அரசியல் விளையாட்டுக்கு உரம் சேர்க்கிறது.

சர்வ வல்லமை
ஒரே நாளில் 1000, 500 ரூபாய் நோட்டுக்களை தடை செய்யும் உத்தரவை பிறப்பிக்க முடிந்த, பாகிஸ்தான் பார்டருக்குள் புகுந்து எதிரிகளை சுட்டுக் கொல்ல முடிந்த, எத்தனையோ மாநிலங்களில் அதிரடியாக குடியரசு தலைவர் ஆட்சியை பிரகடனப்படுத்த முடிந்த, சர்வ வல்லமை பெற்ற ஒரு மத்திய அரசால் சாதாரண ஒரு நிகழ்வுக்கான சட்டத்தில் திருத்தம் செய்ய முடியாது என்று சொல்வதை எந்த அறிவார்த்த சமூகமாவது ஏற்க முடியுமா? அப்படியானால் இதன் பின்னணி என்ன? அக்கறையின்மை என்பதை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்? ஏன் அக்கறை வரவில்லை.. இதன் பின்புலத்தில் உள்ள சக்திகள் யார்? இதை தோலுரித்து காட்ட வேண்டியது யார்? மக்கள் சக்தி அதை செய்யுமா?

நீங்கள் திட்டு வாங்கியதே இல்லையா?
உச்சநீதிமன்றம் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் இப்போதைக்கு தீர்ப்பு வழங்க முடியாது என அறிவித்துவிட்ட சூழலில், அவசர சட்டம் பிறப்பித்து ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு வகை செய்வதே எஞ்சியுள்ள ஒரே வழி. இப்படி செய்தால், சுப்ரீம் கோர்ட் கண்டனத்திற்கு ஆளாக வேண்டிவரும் என மத்திய அரசு வாதம் வைத்தால் கூட, இதற்கு முன்பு நீங்கள் கண்டனமே வாங்கவில்லையா என்ற எதிர்க்கேள்வி மக்கள் மன்றத்தால் வைக்கப்படும். பல மாநிலங்களில் குடியரசு தலைவர் ஆட்சியை பிரகடனப்படுத்தியபோதெல்லாம் மத்திய அரசை சுப்ரீம் கோர்ட் கடுமையாக வறுத்தெடுத்ததை அப்போது மக்கள் மத்திய அரசுக்கு நினைவுகூறலாம்.












Click it and Unblock the Notifications