சிஏஏ போராட்டம் தீவிரமாக இருந்த.. அசாமில் தொடரும் பாஜக ஆதிக்கம்... 'இந்த' ஒற்றை விஷயம்தான் காரணம்
திஸ்பூர்: மத்திய அரசின் சிஏஏவுக்கு எதிராக அசாம் மாநிலத்தில் தீவிரமாகப் போராட்டம் நடத்தப்பட்ட போதிலும், காங்கிரஸ் கட்சியால் அங்கு பெரியளவில் வெல்ல முடியாது என கருத்துக்கணிப்புகளில் தெரியவந்துள்ளது.
வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் வரும் மார்ச் 27, ஏப்ரல் 1 மற்றும் 6 என மூன்று கட்டங்களாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அசாம் மாநிலத்தில் பிராந்திய கட்சிகள் வலுவாக இல்லை.
இதன் காரணமாக அங்கு தற்போது ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நிலவுகிறது. கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் வென்று பாஜகவின் சர்பானந்தா சோனோவால் தற்போது அங்கு முதல்வராக உள்ளார்.

காங்கிரஸ் கூட்டணி
கடந்த தேர்தலில் கையைவிட்டுப் போன அசாம் மாநிலத்தில் மீண்டும் காங்கிரஸ் கொடியை ஏற்றியே தீர வேண்டும் என்ற முனைப்பில் அக்கட்சி களமிறங்குகிறது. இதற்காக அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, போடோலாண்ட் மக்கள் முன்னணி, இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுடன் காங்கிரஸ் வலுவான கூட்டணியை அமைத்துள்ளது.

சிஏஏ போராட்டம்
மேலும், ஆட்சியுள்ள அரசின் மீது இயல்பாகவே இருக்கும் எதிர்ப்பு மனநிலை தனக்குச் சாதமாக இருக்கும் எனக் காங்கிரஸ் கருதுகிறது. இதுதவிர கடந்த 2019ஆம் ஆண்டு மத்திய அரசு இயற்றிய குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும் அசாம் மாநிலத்தில் மாபெரும் போராட்டம் நடைபெற்றது. இந்தச் சட்டத்தால் அசாம் மக்கள் பாஜக மீது கடும் கோபத்திலிருந்தனர். இந்த வாக்குகளும் காங்கிரஸ் தனக்குக் கிடைத்துவிடும் எனக் கருதியது.

கருத்துக் கணிப்புகள்
இருந்தாலும்கூட இதுவரை வெளியான கருத்துக்கணிப்புகள் எதிலும் அசாம் மாநிலத்தில் ஆட்சி மாற்றம் நடைபெறும் எனக் கூறப்படவில்லை. இம்மாத தொடக்கத்தில் வெளியான டைமஸ் நவ் கருத்துக்கணிப்பில் பாஜக கூட்டணி 67 இடங்களிலும் காங்கிரஸ் 57 இடங்களிலும் வெல்லும் எனக் கூறப்பட்டிருந்தது. அதேபோல நேற்று வெளியான ஏபிபி கருத்துக்கணிப்பிலும் பாஜக 64-72 இடங்களில் வெல்லும் எனத் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியால் 60 இடங்கள் வரை வெல்ல முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிஏஏ போராட்டத்தைச் சமாளித்த பாஜக
காங்கிரஸ் கட்சியால் நெருங்கி வந்தாலும்கூட, அசாம் மாநிலத்தில் பாஜகவை தோற்கடிக்க முடியவில்லை. இதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன. சிஏஏ எதிர்ப்பு வாக்குகள் தனக்கு வந்துவிடும் எனக் காங்கிரஸ் கருதியது. ஆனால், பாஜக அரசு போராட்டங்களைச் சிறப்பாக கையாண்டது. அசாம் மக்களின் தனித்துவம் இந்தச் சட்டத்தால் எவ்வித்திலும் பாதிக்கப்படாது என்று பாஜக தலைவர்கள் உறுதியளித்தனர். மேலும், சிஏஏ போராட்டங்களை முன்னெடுத்த சில தலைவர்களும் பாஜகவில் ஐக்கியமாகினர். சிஏஏ-வுக்கு எதிராக அசாம் வாக்களார்களிம் கோபம் குறைந்துள்ளது. கடந்தாண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களிலும் பாஜக வென்றதும் இதையே காட்டுகிறது.

கூட்டணியால் சிக்கல்
அதேபோல மாநிலத்தில் உள்ள இஸ்லாமியர்களின் வாக்குகளைக் கவரக் காங்கிரஸ் அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளது. இது அசாம் மாநிலத்தில் உள்ள பராக் பள்ளத்தாக்கு பகுதியில் காங்கிரஸ் கூட்டணிக்குப் பலன் அளிக்கும். இருந்தாலும், இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மேற்கு அசாம் மாநிலத்தில் இது காங்கிரஸ் வாக்குகளைப் பாதிக்கும்.

தலைமை இல்லை
மற்றொரு முக்கிய காரணம், அசாம் மாநிலத்தில் மக்களைக் கவரும் முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் யாரும் இல்லை. அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் முகமாகவும் அம்மாநிலத்தின் முதல்வராகவும் மூன்று முறை இருந்தவர் தருண் கோகாய். இவர் கடந்த ஆண்டு உயிரிழந்தார். அவருக்குப் பின் மக்கள் செல்வாக்கு உள்ள ஒரு தலைவரைக் கண்டுபிடிப்பதில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை. வலுவான ஒரு தலைமையும், காங்கிரஸ் கட்சியில் இறங்கி வேலை செய்யக்கூடிய அளவுக்குக் களப் பணியாளர்கள் இல்லாததுமே அசாம் மாநிலத்தில் பாஜக செல்வாக்கைத் தொடர்ந்து உயர்த்துகிறது.












Click it and Unblock the Notifications