காஷ்மீர் முதல் பஞ்சாப் வரை.. இருளில் மூழ்கிய எல்லை மாவட்டங்கள்.. போர் காலங்களில் பிளாக் அவுட் ஏன்?
ஸ்ரீநகர்: ஜம்மு பகுதியில் இப்போது திடீரென பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. இருப்பினும், நமது எஸ்400 பாதுகாப்பு அமைப்பை அது சுட்டு வீழ்த்தி வருகிறது. அதேநேரம் காஷ்மீரில் பல பகுதிகள் உட்பட எல்லையோர மாவட்டங்களில் பிளாக் அவுட் அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாகப் போர்க் காலங்களில் மட்டுமே இதுபோல பிளாக் அவுட் செய்யப்படும். இதுபோல பிளாக் அவுட் செய்யப்பட என்ன காரணம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
பஹல்காம் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் 9 இடங்களில் உள்ள தீவிரவாத முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டன. மிகத் துல்லியமாக இந்திய ராணுவம் நடத்திய இந்தத் தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ட்ரோன் தாக்குதல்
இந்திய ராணுவத்தின் இந்த வெற்றியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் திடீரென இப்போது எல்லையில் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. காஷ்மீர் தொடங்கி எல்லையில் பல இடங்களில் ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. இருப்பினும், இதனால் இதுவரை எந்தவொரு சேதாரமும் ஏற்படவில்லை. ஏனென்றால் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பான எஸ் 400 வெற்றிகரமாக மக்களைப் பாதுகாத்து வருகிறது.
அதேநேரம் தாக்குதல் காரணமாக காஷ்மீர், பஞ்சாப் உட்பட எல்லையில் அமைந்துள்ள பல்வேறு பகுதிகளிலும் பிளாக் அவுட் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாகப் போர்க் காலத்தில் இதுபோல பிளாக் அவுட் நடைமுறைப்படுத்தப்படும். அதாவது ஒட்டுமொத்தமாக அனைத்துப் பகுதிகளிலும் மின்சாரச் சேவை துண்டிக்கப்படும். இதனால் எதிரிப் படைகளால் இலக்குகளைக் கண்டறிந்து தாக்குவது கடினமாக இருக்கும்.
எதற்காக பிளாக் அவுட்
முன்பு எந்த இடத்தில் மக்கள் அதிகம் வசிக்கிறார்கள் என்பதை விளக்குகளை வைத்தே கண்டுபிடிப்பார்கள். அதாவது எந்தப் பகுதியில் விளக்குகள் அதிகம் இருக்கிறதோ.. அங்கு மக்கள் அதிகம் வசிக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து தாக்குதலை நடத்த விளக்குகள் தான் உதவும். 1971இல் பாகிஸ்தானுடனான போரில் நாம் பிளாக் அவுட் மூலமாகவே பொதுமக்கள் வசிக்கும் இடங்களைப் பாதுகாத்தோம்.
முக்கிய உட்கட்டமைப்பு
அதேபோல தாக்குதல் சமயத்தில் முக்கியமான உள்கட்டமைப்பைக் குறிவைத்தே அதிகம் தாக்குதல் நடத்தப்படும். உதாரணமாக மின்சார உற்பத்தி நிலையங்கள் மற்றும் ராணுவ மையங்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவார்கள். அந்த இடங்களைத் துல்லியமாகவும் எளிதாகவும் விளக்குகள் மூலமாகவே கண்டறிவார்கள். இந்தச் சூழலில் மொத்தமாக மின்சாரத்தை அணைத்துவிட்டால் முக்கிய உள்கட்டமைப்புகள் துல்லியமாக எங்கே உள்ளது என்பதைக் கண்டறிவதிலும் சிரமம் ஏற்படும்.
இப்போது கை கொடுக்குமா?
நவீனப் போரில், ஜிபிஎஸ் மற்றும் துல்லியமாக இலக்கை நோக்கிப் பாயும் ஆயுதங்கள் இருப்பதால் பிளாக் அவுட் முறையின் செயல்திறன் குறைகிறது. ஆனாலும் பிளாக் அவுட் உளவியல் போர்த் தந்திரங்களுக்குப் பயன்படவே செய்கிறது. தாக்குதல் நடத்தும் போது திடீரென மின்விளக்குகள் பிளாக் அவுட் ஆகும் போது எதிரிகள் எவ்வளவு துல்லியமாகத் திட்டமிட்டாலும் அது சீர்குலையும். மேலும், உள்ளூர் மக்களுக்கு வெளிச்சமே இல்லை என்றாலும் எது பாதுகாப்பான இடம் என்பது தெரியும் என்பதால் அவர்கள் எங்கு எளிதாகச் சென்றுவிடுவார்கள்.
இதன் காரணமாகவே கடந்த புதன்கிழமை நடந்த போர் ஒத்திகையிலும் கூட பிளாக் அவுட்டிற்கு முக்கியத்துவம் தரப்பட்டது. எல்லையோர மாவட்டங்கள் மட்டுமின்றி தலைநகர் டெல்லி உட்பட முக்கிய நகரங்களில் ஒத்திகையில் பிளாக் அவுட் முக்கிய பங்கு வகித்தது.












Click it and Unblock the Notifications