சொந்த மக்கள் சாகும்போது.. வெளிநாட்டுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்தது ஏன்? ஜார்கண்ட் அமைச்சர் கேள்வி
ராஞ்சி: சொந்த மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இல்லாத நிலையில், வெளிநாடுகளுக்கு ஏன் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று ஜார்க்கண்ட் மாநில சுகாதாரத்துறை அமைச்சர், குற்றம்சாட்டியுள்ளார்.
கடுமையான தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக, ஜார்கண்ட் அரசு 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது.
இந்த நிலையில், மாநில சுகாதார அமைச்சர் பன்னா குப்தா மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார். "மத்திய அரசு எங்களுடன் அரசியல் செய்து கொண்டுள்ளது. ஒரு மத்திய அரசாக, அது கூட்டாட்சி கட்டமைப்பை மதிக்க வேண்டும். மேலும் எங்களுக்கு தடுப்பூசிகள் மற்றும் மருந்துகளை விரைவாக வழங்குவதற்கு வசதி செய்ய வேண்டும்.

ஜார்கண்ட் நிலவரம்
நாங்கள் 50 லட்சம் அளவுகளுக்கு ஆர்டர் செய்தோம். மே 15 முதல் மே 30க்குள் வழங்கப்படும் என்று மத்திய அரசு சொல்கிறது. கோவிட் -19 இன் இரண்டாவது அலையால் ஜார்கண்ட் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, இதுவரை 3,853 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது, தற்போது 58,806 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளன.

வெளிநாடுகள்
சொந்த நாட்டு மக்கள் இறக்கும் போது வெளிநாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகளை அனுப்புவதற்கு என்ன அவசியம்?
தேர்தலுக்கு முன்னதாக, மேற்கு வங்கம் மற்றும் பீகார் மக்களுக்கு இலவசமாக கோவிட் -19 தடுப்பூசிகளை வழங்குவதாக பாஜக உறுதியளித்திருந்தது.

மக்களை சித்திரவதை செய்ய கூடாது
நீங்கள் எங்களுடன் ஏன் அரசியல் செய்கிறீர்கள்? எங்களுக்கு தடுப்பூசிகளை வழங்குங்கள். நாங்கள் அதை வாங்க தயாராக இருக்கிறோம். நீங்கள் எங்கள் மக்களை சித்திரவதை செய்கிறீர்கள், அவர்களை அவமதிக்கிறீர்கள். உயிர்காக்கும் மருந்துகளை வழங்குவதில் கூட பாரபட்ச அணுகுமுறையை உள்ளது.

ரெடியாக இருக்கிறோம்
18-44 வயதினருக்கான தடுப்பூசி இயக்கத்தைத் தொடங்க நாங்கள் முழுமையாக தயாராக இருக்கிறோம். இன்று நீங்கள் எங்களுக்கு தடுப்பூசிகளைக் கொடுத்தால் கூட, நாளை முதல் இயக்கத்தைத் தொடங்குவோம். ஒரு நாளைக்கு சுமார் 4.5 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வானொலி உரை
கடந்த வியாழக்கிழமை, கொரோனா நிலைமை குறித்து ஜார்கண்ட், ஒடிசா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா முதலமைச்சர்களிடம் மோடி பேசினார். இதையடுத்து, நள்ளிரவில் பிரதமருடனான தொலைபேசி உரையாடல் குறித்து ஹேமந்த் சோரன் ட்வீட் செய்தார். "பிரதமர் இன்று போனில் அழைத்தார், அவர் 'மான் கி பாத்' மாதிரி பேசினார். எதிர் தரப்பிடம் கருத்தே கேட்கவில்லை" என்றார்.












Click it and Unblock the Notifications