சத்தீஸ்கரில் பாஜக ஸ்டன்னிங் வெற்றி! "ஹர ஹர மகாதேவ்" காங்கிரஸ் தோல்விக்கு இத்தனை காரணங்களா?
ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் காங்கிரஸே வெல்லும் என கூறப்பட்ட நிலையில் அதற்கு எதிர்மறையாக காங்கிரஸ் பின்னடைவை சந்தித்து வருகிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் இரு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. அதாவது நவம்பர் 7, 17 ஆகிய இரு தேதிகளாகும். இந்த மாநிலத்தில் மொத்தம் 90 சட்டசபை தொகுதிகள் உள்ளன.

இந்த நிலையில் 90 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 46 இடங்களில் எந்த கட்சி வெல்கிறதோ அந்த கட்சியே ஆட்சியை அமைக்கும் என்பதுதான் மேஜிக் நம்பர் ஆகும்.
கடந்த 2018ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் 68 இடங்களில் காங்கிரஸ் கட்சி வென்று ஆட்சியை பிடித்தது. வெறும் 15 இடங்களில் வென்று பாஜக தோல்வி அடைந்தது. 5 தொகுதிகளில் வென்றது முன்னால் முதல்வர் அஜித் ஜோகியின் கட்சி. அந்த வகையில் இந்த முறை பாஜக, காங்கிரஸுக்கு இடையே பெரும் போட்டி நிலவுகிறது.
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் காங்கிரஸ் கட்சியே சத்தீஸ்கரில் வெல்லும் என கணிக்கப்பட்ட நிலையில் தற்போது தேர்தல் முடிவுகளில் பாஜகவே முன்னிலை வகித்து வருகிறது. பெரும்பான்மைக்கு தேவையான தொகுதி எண்ணிக்கையிலும் பாஜகவே முன்னிலை வகித்து வருகிறது.
சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் விவசாயிகள், பழங்குடியின மக்களுக்கு எத்தனையோ நலத்திட்டங்களை செய்தும் அவரும் பதான் தொகுதியில் பின்னடைவை சந்தித்து வருகிறார். இதற்கு முக்கிய காரணம் மகாதேவ் செயலி ஆகும். வட இந்தியாவில் பிரபலமான மகாதேவ் சூதாட்ட செயலி மீது அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்தது.
அப்போது கூரியர் நிறுவனத்திற்கு சொந்தமான கார், அதன் உரிமையாளர்களின் வீடுகளில் ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டது. இந்த நிலையில் சத்தீஸ்கர் மாநில தேர்தல் செலவுக்காக முதல்வர் பூபேஷ் பாகல், மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளர்களிடம் ரூ 508 கோடி பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. இவரிடம் அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது.
இந்த குற்றச்சாட்டுகளை பாகல் மறுத்தாலும் அது தேர்தலில் எதிரொலித்துள்ளதாகவே கருதப்படுகிறது. மேலும் காங்கிரஸ் கட்சியில் உள்ள கோஷ்டி பூசலும் சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சியை இழக்க காரணம் என சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு நடந்த தேர்தலின் போதே பூபேஷ் பாகலும், டிஎஸ் சிங் தேவும் இரண்டரை இரண்டரை ஆண்டுகள் ஆட்சி செய்ய முடிவு செய்யப்பட்டது.
ஆனால் அது போல் நடக்கவில்லை, அதற்கு பதிலாக பாகலே 5 ஆண்டுகளும் ஆட்சி செய்தார். டி.எஸ். சிங் தேவ் துணை முதல்வராக்கப்பட்டார். இந்த முறையும் காங்கிரஸ் வென்றால் யார் முதல்வர் என்ற ரேஸ் இருந்து கொண்டிருந்தது. எனவே பாகலுக்கு எதிராக சொந்த கட்சியினரே தேர்தல் பணிகளை ஆற்றாமல் விட்டுவிட்டார்களோ என்ற சந்தேகமும் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications