மக்கள் கோபத்திலிருந்து தப்பிக்க நீட் அவசர சட்டம்.. எடப்பாடி அரசுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு
டெல்லி: நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற்றுத்தர எதையாவது செய்தேயாக வேண்டிய கட்டாயத்தில் தமிழக அரசு சிக்கியுள்ளது.
எனவே ஜல்லிக்கட்டு போல நீட் தேர்வுக்கு விலக்கு கோரி நீட் தேர்வில் இருந்து அவசர சட்டம் இயற்ற மாநில அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதற்கான ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறார். மாணவ, மாணவிகள் எதிர்காலம் தொடர்பான பிரச்சினை என்பதால் மக்கள் கடும் கோபத்தில் இருப்பதால் இதை சமாளிக்க பழனிச்சாமி அரசு இந்த ஏற்பாடு செய்துள்ளது.

அவசர சட்டம்
ஜல்லிக்கட்டு போராட்டம் உச்சத்தில் இருந்தபோது, முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் அரசு இதைத்தான் செய்தது. இப்போது எடப்பாடி அரசும் அதே பாணியை பின்பற்ற திட்டமிட்டு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருகிறது.

எதிர்க்கட்சிகள்
அன்புமணி ராமதாஸ் உண்ணாவிரதம், திமுகவின் மனித சங்கிலி என எதிர்தரப்பு அழுத்தம் அரசுக்கு எதிரான கோபமாக மக்களை திசை திருப்பி மாற்றிவிட கூடும் என்ற அச்சம் எடப்பாடி அரசுக்கு உள்ளது.

கேள்விகள் ஆயிரம்
இந்த கோபத்திலிருந்து தப்பிக்க ஏதாவது செய்தாக வேண்டிய கட்டாயம் எடப்பாடி அரசுக்கு உள்ளது. அல்லது, ஜல்லிக்கட்டுக்கு முடிந்தது நீட்டுக்கு முடியாதா என பன்னீர்செல்வம் தரப்பே கேள்வி கேட்க கூடும்.

மத்திய அரசிடம் ஆதரவு
இதை வைத்துதான் டெல்லியில் சமீபமாக பெருக்கி வரும் தனது செல்வாக்கை பயன்படுத்தி ஏதாவது செய்துவிட வேண்டும் என்பது எடப்பாடி பழனிச்சாமியின் நோக்கமாக உள்ளது.

செய்தேயாக வேண்டும்
அரசு இந்த விஷயத்தில் சோடை போனால் பிறகு மக்களிடம் செல்வாக்கு முற்றிலும் சரிந்துவிடும், அதுவே ஏதாவது செய்து மாணவர்கள் நலனை காத்தால் நல்ல பெயர் கிடைத்துவிடும். இந்த விஷயத்தில் மத்தியஅரசின் ஒத்துழைப்பும் தேவை என்பதால் டெல்லியில் பிரதமரை, முதல்வர் சந்தித்தபோது இதுகுறித்து ஆலோசித்ததாக கூறப்படுகிறது. கிரீன் சிக்னல் கிடைத்ததும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications