இத்தனை நாளா எங்கே போனீங்க! பாஜக கூட்டணி எம்எல்ஏவின் கன்னத்தில் ஓங்கியறைந்து கேட்ட பெண்! பரபர ஹரியானா
அம்பாலா: ஹரியானா மாநிலத்தில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்ற ஆளும் பாஜக கூட்டணி கட்சியின் எம்எல்ஏவின் கன்னத்தில் பெண் தாக்கியதோடு, ‛‛இப்போது ஏன் இங்கே வந்தீர்கள்'' என கேள்வி எழுப்பி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, டெல்லி, இமாச்சல பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்கள் அதிக வெள்ள பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. டெல்லி யமுனை ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பாய்ந்தோடுகிறது.

இமாச்சல பிரதேசத்தில் ஏராளமான மக்கள் வெள்ளத்தால் வீடுகளை இழந்துள்ளனர். இங்கு வரை 88 பேர் மழை வெள்ளத்துக்கு பலியாகி உள்ள நிலையில் 16 பேர் மாயமாகி உள்ளனர். 100 பேர் காயமடைந்துள்ளனர்.
அதேபோல் ஹரியானா மாநிலத்திலும் கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அம்பாலா உள்பட பல இடங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. அதேபோல் குல்லா பகுதியில் காகர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் தடுப்பணை உடைந்தது. இதன் காரணமாக குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் புகுந்தது. மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
மேலும் மக்கள் பிரதிநிதிகள் யாரும் அவர்களுக்கு உதவி செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர்கள் விரக்தியடைந்தனர். இந்நிலையில் தான் ஹரியானாவை ஆளும் பாஜகவின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஜேஜேபி எனும் ஜனயாக் ஜனதா கட்சியை சேர்ந்த எம்எல்ஏ ஈஸ்வர் சிங் நேற்று வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்றார்.
அப்போது அங்கு வசிக்கும் மக்கள் அவரை சூழ்ந்து எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த வேளையில் இப்போது மட்டும் ஏன் இங்கே வந்தீர்கள்? எனக்கூறி பெண் ஒருவர் எம்எல்ஏ ஈஸ்வர் சிங்கின் கன்னத்தில் அடித்தார். அதாவது எம்எல்ஏ ஈஸ்வர் சிங் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் செய்திருந்தால் அணை உடைந்து வெள்ள பாதிப்பு ஏற்பட்டு இருக்காது என அந்த பெண் மற்றும் பொதுமக்கள் ஆக்ரோஷத்தை வெளிக்காட்டினர்.

இதையடுத்து அங்கிருந்த போலீஸ்காரர் அந்த பெண்ணை தடுத்து அனுப்பி வைத்தார். இச்சம்பவம் குறித்து எம்எல்ஏ ஈஸ்வர் சிங் கூறுகையில், ‛‛மழை வெள்ள பாதிப்பை ஆய்வு செய்தபோது என் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. நான் நினைத்து இருந்தால் அணை உடைவதை தடுத்து இருக்கலாம் என என்னிடம் வாக்குவாதம் செய்தனர். அப்போது இது இயற்கை பேரிடரால் உடைந்ததாக எடுத்து கூறி விளக்கமளித்தேன்'' என்றார்.
இதற்கிடையே மழை வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய சென்ற எம்எல்ஏ ஈஸ்வர் சிங்கை, பெண் ஒருவர் கன்னத்தில் அடித்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications