கிரிக்கெட் சங்க ஊழல் பற்றி சிபிஐ விசாரணை: விடாமல் விரட்டி ஜேட்லிக்கு செக் வைக்கும் கீர்த்தி ஆசாத்
டெல்லி: அருண் ஜேட்லி மீதான குற்றச்சாட்டுக்கு காரணமான, டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் தொடர்பாக ‘சி.பி.ஐ. விசாரணை' நடத்தப்பட வேண்டும் என்று பாரதிய ஜனதா எம்.பி. கீர்த்தி ஆசாத் வலியுறுத்தி உள்ளார். கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையிலும், ஆசாத் இவ்வாறு விடாப்பிடியாக கூறிவருகிறார்.
டெல்லி மாவட்ட கிரிக்கெட் சங்க முறைகேட்டில் 13 ஆண்டுகள் அதன் தலைவராக இருந்த அருண் ஜெட்லிக்கு தொடர்பு உள்ளது என்று ஆம் ஆத்மி, காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் ஊழல் நடந்துள்ளதாக, முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பி.யுமான கீர்த்தி ஆசாத்தும் குற்றச்சாட்டை எழுப்பினார். ஜேட்லிக்கு எதிரான கருத்து இது என்று கூறி, கட்சிவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக ஆசாத்தை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து பாஜக உத்தரவிட்டது.
இந்நிலையில் டெல்லி கிரிக்கெட் சங்க ஊழல் தொடர்பாக ‘சி.பி.ஐ. விசாரணை' நடத்தப்பட வேண்டும் என்று கீர்த்தி ஆசாத் தற்போது, வலியுறுத்தி உள்ளார். நான் கிரிக்கெட் வாரியத்தில் ஏற்பட்ட ஊழலுக்கு எதிராகவே போராடுகின்றேனே தவிர, அருண் ஜேட்லிக்கு எதிராக கிடையாது என்றும் கீர்த்தி ஆசாத் குறிப்பிட்டு உள்ளார்.
விளையாட்டில் ஊழல் நடைபெற்று இருப்பது பற்றி கடந்த சில ஆண்டுகளாக போராடி வருகின்றேன், இது தொடரும். இதில் அருண் ஜேட்லியை இழுக்காதீர்கள். டெல்லி கிரிக்கெட் சங்கத்தில் ஊழல் நடைபெற்றது என்பதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக கிரிக்கெட் சங்கத்திடம் ஆவணங்களை பகிர்ந்துக் கொண்டேன், ஆனால் ஒன்றும் நடக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications