ஜெகனை விட பவன் கல்யாண் பவர்ஃபுல் லீடர்! அனல் பறக்கும் ஆந்திர அரசியல்!
அமராவதி: ஜெகன்மோகன் ரெட்டியைவிடப் பவன் கல்யாண் சிறந்த அரசியல் தலைவர் என்று தெலுங்கு ஊடகங்கள் விவாதம் செய்து வருகின்றன. அது எப்படி? எங்கே சறுக்கினார் ஜெகன்? எங்கே சாதித்தார் பவன்?
ஆந்திர மாநிலத் துணை முதல்வராகப் பவன் கல்யாண் பதவியேற்றது முதல், அவரையும் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியையும் ஒப்பிட்டு யார் சிறந்த தலைவர் என்று தெலுங்கு ஊடகங்கள் விவாதித்து வருகின்றன. ஆளும் கட்சியாக ஜெகன் இருந்த வரை அடக்கி வாசித்து வந்த ஊடகங்கள் இப்போது அவரைப் பற்றியும் அவரது அரசியல் அணுகுமுறை பற்றியும் விவாதத்தைக் கிளப்பி விடை தேட ஆரம்பித்துள்ளன.

ஜெகன்மோகன் ரெட்டி தனது ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியைக் கடந்த 2011இல் தான் தொடங்கினார். அதற்கு முன்னதாக அவரது அப்பா ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி காங்கிரஸ் கட்சி சார்பில் 2004 தொடங்கி 2009 வரை ஆந்திராவின் முதல்வராக இருந்தார். அதற்கு முன்பாக அவர் கடப்பா மக்களவைத் தொகுதியிலிருந்து 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதேபோல 1978 தொடங்கி 2009வரை ஆறுமுறை சட்டமன்றத்திற்குத் தேர்வானார். அந்தளவுக்கு செல்வாக்கு மிக்க காங்கிரஸ் தலைவராக வலம் வந்த இவர் 2009 ஹெலிக்காப்டர் விபத்தில் மரணமடைந்தார். அந்தச் செய்தி ஆந்திர அரசியலைக் கடந்த ஒட்டுமொத்த தேசத்திற்கும் சோக செய்தியாக மாறியது.
அதன் பின்னர் காங்கிரஸ் கட்சிக்கும் ஒய்.எஸ்.ஆர் மகன் ஜெகன் ரெட்டிக்கும் மிகப்பெரிய அரசியல் மோதல் நடந்துவந்தது. ஆகவே, அவர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை தொடங்கினார். பலரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் என்ற பெயரை ஜெகன்மோகனுடைய அப்பாவின் பெயருடன் சம்பந்தப்படுத்தி தவறாகப் புரிந்து கொள்கின்றனர். ஆனால், அந்தக் கட்சியின் விரிவாக்கம் என்ன தெரியுமா? யுவஜன ஸ்ராமிக விவசாயி காங்கிரஸ் கட்சி. மறைமுகமாக அப்பாவின் பெயரை இதைச் சுருக்கியதன் மூலம் அடையாளப்படுத்தினார்.
2011இல் தொடங்கப்பட்ட தனது கட்சியை வளர்த்து, ஆந்திர அரசியலில் பழம்பெரும் கட்சியாகக் கருதப்படும் தெலுங்கு தேசம் கட்சியை ஆட்சி அதிகாரத்திலிருந்து 2019இல் இறக்கினார். டிடிபி 1982 இல் தொடங்கப்பட்ட கட்சி. அதை ஒழிக்கும் திட்டத்தில் இறங்கிய ஜெகன், ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததும் ஆந்திர மாநில அரசியலில் மட்டும் இல்லாமல் இந்திய அரசியலையே தன் பக்கம் வைத்திருந்த மூத்த அரசியல்வாதியான சந்திரபாபுவையும் அவரது கட்சியையும் சட்டசபையில் இழிவுபடுத்தினார்.
ஒரு கட்டத்தில் இந்த மோதல் சட்டசபையில் பெரிதாக வெடித்தது. சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரியை கொச்சைப் படுத்திப் பேசியதைக் கேட்ட அவர், இனிமேல் முதல்வராகத்தான் சட்டப்பேரவைக்குள் அடி எடுத்து வைப்பேன் என்று சபதம் போட்டுவிட்டுக் கிளம்பினார். அந்தளவுக்கு ஜெகன்மோகன் ஆட்டம் அதிகமானது.
கடந்த 2019இல் 175 இடங்களுக்கு 151 இடங்களில் வெற்றி பெற்ற இவரது கட்சி இந்த 2024 தேர்தலில் வெறும் 11 இடங்களில்தான் வெற்றி பெற்றது. இந்தளவுக்கு ஒரு மோசமான சரிவை அரசியலில் சந்தித்துள்ளார் ஜெகன். இவருடன் ஒப்பிடும் போது பவன் கல்யாண் கடந்த 2014இல் தான் ஜனசேனாவை தொடங்கினார். 2019இல் ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது அவரது கட்சி. ஆனால், அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த ஒரு எம்.எல்.ஏவையும் தன் தூக்கினார் ஜெகன்.
இதன் மூலம் கடந்த 5 ஆண்டுகளில் பவன் பெற்ற தோல்விகளுக்கு அளவே இல்லை. ஆனால், இன்று 21 இடங்களில் வென்று துணை முதல்வராக வந்து நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார். ஆகவே, ஜெகனை விடப் பவன் கல்யாண் சிறந்த தலைவர் என்று கருத்து கூறுகின்றன ஆந்திர ஊடகங்கள்.
அது எப்படி என்றால், ஜெகன்மோகன் ரெட்டி இதுவரை 2 முறை எம்பியாகவும், 3 முறை எம்எல்ஏவாகவும் இருந்துள்ளார். ஒருமுறை ஆந்திராவின் முதல்வர் அவர். பவன் அரசியலில் பெற்ற முதல் வெற்றி இதுதான். அதிலேயே அவர் துணை முதல்வர். அவமானங்களைக் கடந்து வந்த அவருக்கு மக்கள் வழங்கியுள்ள பரிசு இது. ஜெகன் ஆட்சியில் பல அவமானங்களை நாயுடுவும் பவனும் சந்தித்துள்ளனர். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நாயுடு சில காலங்கள் கழித்துத்தான் சட்டசபையை விட்டு வெளியேறினார்.
ஆனால், இப்போது, ஜெகன்மோகன் ரெட்டி இரண்டாவது நாளிலேயே சட்டசபையை விட்டு அவமானம் தாளாமல் வெளியேறிவிட்டார். மேலும் வர உள்ள அவமானங்களுக்குப் பயந்து, எதிர்க்கட்சித் தலைவர் என்ற பொறுப்பிலிருந்தே பின்வாங்கிவிட்டார். அவருக்கு எதிர்க்கட்சிக்கான அங்கீகாரம் பெறும் அளவுக்குச் சீட்டுகள் இல்லை என்பது இன்னொரு புறம். ஆட்சிக்கு வந்த நாயுடுவுடன் கொஞ்சமாவது அவர் விவாதம் செய்திருக்க வேண்டும். அதை அவர் முற்றாகத் தவிர்த்துவிட்டார். ஆகவேதான் அவரைவிடப் பவன் தைரியமானவர் என எழுதத் தொடங்கியுள்ளன தெலுங்கு பத்திரிகைகள்.
கடந்த முறை நாயுடு வெளியேறிய பிறகும் மீதம் உள்ள தெலுங்கு தேசம் எம்.எல்.ஏக்கள் அவைக்கு வந்தனர். ஆனால், அவரை நுழையவிடாமல் தடுக்கும் வேலைகளில் இறங்கினார் ஜெகன். இது ஜெகன் செய்த தவறு. இன்று அவையிலிருந்து மக்களுக்காகப் போராடாமல் அவைக்கு வருவதைத் தவிர்த்துள்ளார். மக்களுக்காகப் போராடாமல் தலைவர்களை மக்கள் புறக்கணிப்பார்கள். அதை இப்போது ஜெகன் வடிவில் ஆந்திர மக்கள் செய்து காட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications