ப.சிதம்பரத்தின் 'ராஜ்யசபா' எம்.பி. கனவுக்கு வேட்டு வைத்த திக்விஜய்சிங்!!
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாகிவிட வேண்டும் என்ற கனவுக்கு வேட்டு வைத்தது காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய்சிங்தான் என்று கூறப்படுகிறது.
காங்கிரஸ் படுதோல்வி அடைந்துவிடும் என்பதை உணர்ந்த ப.சிதம்பரம் லோக்சபா தேர்தலில் போட்டியிடவில்லை. இது காங்கிரஸ் மேலிடத்துக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
பின்னர் சிவகங்கை தொகுதியில் தமது மகனை நிறுத்தினார். அவரது மகனும் படுதோல்வியைத்தான் தழுவினார்.

காங்கிரஸ் பரிதாப தோல்வி
தேர்தலில் காங்கிரஸ் கட்சியும் வரலாறு காணாத படுதோல்வியை சந்தித்து எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெற முடியாத பரிதாப நிலைக்குப் போனது.

ராஜ்யசபா தேர்தல்
இந்நிலையில் 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு ஜூன் 19-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் கர்நாடகாவில் 4 இடங்களும் அருணாச்சலபிரதேசம் மற்றும் மிசோரம் மாநிலங்களில் தலா ஒரு இடங்களும் அடங்கும்.

கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்.பி..
இதைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் இருந்து தம்மை ராஜ்யசபா எம்.பி.யாக்குவதற்கான லாபிகளில் ப.சிதம்பரம் ஈடுபட்டார். முதலில் காங்கிரஸ் மேலிடம் ஓகே சொல்ல மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் தேவகவுடாவை சந்தித்து தமக்கு ஆதரவையும் கோரியிருந்தார் ப.சிதம்பரம்

தேவகவுடா ஆதரவு
இந்த ஆதரவு படலத்தை தேவகவுடாவின் மகன் குமாரசாமியும் உறுதி செய்திருந்தார்.

கர்நாடக காங்கிரஸ் போர்க்கொடி
ஆனால் கர்நாடக முதல்வர் சித்தராமையா திடீரென ப.சிதம்பரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதன் பின்னர் கர்நாடகா காங்கிரஸ், தமிழகத்துக்கு ஆதரவாக செயல்படும் ப.சிதம்பரத்தை எங்கள் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்.பி.யாக தேர்ந்தெடுப்பதா என்று போர்க்குரல்கள் வெடித்தன.

திக்விஜய்சிங்தான் காரணம்
திடீரென வெடித்த இந்த போர்க்குரல்களுக்குப் பின்னணியில் இருப்பதே கர்நாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப்பாளரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய்சிங்தான் என்று ப.சிதம்பரம் முகாம்கள் குமுறுகின்றன.

கடுப்பில் ராகுல்
ப.சிதம்பரம் சீனியர் தலைவர் என்றாலும் கூட அது சோனியா அளவுக்குத்தான்.. ராகுலைப் பொறுத்தவரையில் ப.சிதம்பரம் தேர்தலில் போட்டியிடாததால் கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

சிதம்பரத்தை வெறுத்த திக்விஜய்சிங்
இந்த நிலையில் ராகுலின் குருநாதரான திக்விஜய்சிங்கை ராஜ்யசபா எம்.பி தேர்தல் தொடர்பாக சந்திக்க ப.சிதம்பரம் விரும்பி பேசியிருக்கிறார். ஆனால் திக்விஜய்சிங்கோ, என்னை நீங்க ஏன் பார்க்கனும் என்று முகத்தில் அறைந்தது போல் பதில் கொடுக்க ப.சிதம்பரம் ஆடிப்போனாராம். இதன் பின்னர்தான் கர்நாடகவில் தமக்கு எதிராக கலகக் குரல் எழும்பியது என்பதால் அனைத்துக்குமே திக்விஜய்சிங்தான் காரணம் என்று ப.சிதம்பரம் புலம்பிக் கொண்டிருக்கிறாராம்..












Click it and Unblock the Notifications