குஜராத் சட்டசபை தேர்தல்.. 32 ஆண்டுகளாக.. மணிநகர் தமிழர்களின் ஆதரவு பாஜகவுக்கு ஏன்?
அகமதுநகர்: குஜராத் சட்டசபை தேர்தலில் மணிநகர் தொகுதியில் வாழும் தமிழர்களின் ஏகோபித்த ஆதரவு பாஜகவுக்கு ஏன்?
182 சட்டசபையை கொண்ட குஜராத் சட்டசபையின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதையொட்டி, வரும் டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறுகிறது.
குஜராத் தேர்தலில் எப்படியாவது ஆட்சியை பிடிக்க வேண்டும் என காங்கிரஸும் ஆம்ஆத்மியும் தீவிரம் காட்சி வருகின்றன. தொடர்ந்து 25 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருந்து வரும் நிலையில் மேலும் 5 ஆண்டுகள் ஆட்சியில் தொடர பாஜகவும் முனைப்பு காட்டி வருகிறது.

குஜராத்
இந்த நிலையில் குஜராத்தில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புறப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹிமாச்சல் பிரதேசத்தில் நடந்த சட்டசபை தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழக எம்எல்ஏவும் அகில இந்திய பாஜக மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் சென்றிருந்தார்.

தமிழர்களின் வாக்குகள்
குஜராத்தில் தமிழர்களின் வாக்குகளை அண்ணாமலை சென்றுதான் சேகரிக்க வேண்டும் என்றில்லை. அங்கு ஏற்கெனவே தமிழர்களின் ஏகோபித்த ஆதரவு பாஜகவுக்குத்தான் என்கிறார்கள். தமிழக மக்கள் அதிகம் வசிக்கும் மணிநகர் தொகுதியில் கடந்த 1990 ஆம் ஆண்டு முதல் பாஜகவே வெற்றி பெற்றுள்ளது. அதாவது சுமார் 32 ஆண்டுகளாக எந்த கட்சிக்கும் அந்த தொகுதி மக்கள் ஆதரவு கொடுக்காமல் பாஜகவுக்கே கொடுத்து வந்துள்ளார்கள்.

குஜராத் மாநிலம்
இதற்கான காரணம் என்ன என மூத்த பத்திரிகையாளர்களிடம் பேசிய போது அவர்கள் கூறுகையில், குஜராத் மாநிலத்தில் தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியாற்றி வருகிறார்கள். குஜராத் முதல்வராக நரேந்திர மோடி பதவி வகித்த போது தமிழக அதிகாரி திருப்புகழ் ஐஏஎஸ் (தற்போதைய தலைமைச் செயலாளர் இறையன்புவின் சகோதரர்) பேரிடர் மீட்பு பணிகளில் சிறப்பாக பணியாற்றியவர். குஜராத்தில் மிகப் பெரிய பூகம்பம் ஏற்பட்டு ஏராளமான சேதங்கள் ஏற்பட்டபோது மிகவும் துரிதமாக செயல்பட்டார் திருப்புகழ். அது போல் நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்பட்ட போதும் திருப்புகழ் சிறப்பாாக பணியாற்றிய மீட்பு பணிகளை முடுக்கி விட்டார்.

முதல்வர் நரேந்திர மோடி
அப்போதைய முதல்வர் நரேந்திர மோடி தற்போது பிரதமரான நிலையிலும் கூட திருப்புகழ் ஐஏஎஸ் அவருடைய குட் வில் புக்கில் இடம்பெற்றுள்ளார். அது போல் தமிழக லஞ்ச ஒழிப்புதுறை இயக்குநராக உள்ள கந்தசாமி, கடந்த 2010 கால கட்டத்தில் சிபஐ சிறப்பு புலனாய்வுக் குழு டிஜிபியாக இருந்தவர். போலி என்கவுன்ட்டர் வழக்கில் குஜராத் உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷாவை கைது செய்தவர். இவரை போல் ஏராளமான ஐஏஸ், ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பாஜக உகந்த மதிப்பையும் மரியாதையையும் தருவதோடு அவர்களை உயர்ந்த இடத்தில் வைத்து பொக்கிஷம் போல் பாதுகாத்து வருகிறது. இது குஜராத்தில் வாழும் தமிழர்களுக்கு உணர்வு ரீதியாக மகிழ்ச்சியை தந்துள்ளது. இதனாலேயே குஜராத் தமிழ் மக்கள் மற்ற கட்சிகள் என்னதான் பிரச்சாரம் செய்தாலும் தங்கள் வாக்குகளை தாமரை சின்னத்தில் குத்துவதற்கு காரணம் என தெரிவிக்கிறார்கள் மூத்த பத்திரிகையாளர்கள். தமிழர்கள் வடஇந்தியாவில் கோலோச்சி வருவது அங்கு வசிக்கும் தமிழர்களுக்கு பெருமிதத்தை கொடுக்கிறது என சொன்னால் அது மிகையாகாது.












Click it and Unblock the Notifications