பன்னீர்செல்வத்தை சந்திப்பதை நிர்மலா சீதாராமன் தவிர்க்க பின்னணி காரணம் என்ன?
Recommended Video
டெல்லி: தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திக்க மறுத்தது ஏன் என்ற கேள்வி பல மட்டங்களிலும் எழுந்துள்ளது.
நிர்மலா சீதாராமனை சந்திப்பதற்காக நேரம் ஒதுக்கும்படி டெல்லி சென்ற, பன்னீர்செல்வம் கேட்டுக்கொண்டதாகவும் ஆனால் ராஜ்யசபா உறுப்பினர் மைத்ரேயனுக்கு மட்டும் நேரம் ஒதுக்கி விட்டு பன்னீர்செல்வத்தை சந்திக்காமலேயே தவிர்த்து விட்டதாகவும் நிர்மலா சீதாராமன் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து அதிமுகவின் வைகை செல்வன் கூறுகையில், தனது சகோதரர் உடல்நலம் இல்லாமல் இருந்தபோது ராணுவ அமைச்சர் என்ற வகையில் நிர்மலா சீதாராமன் செய்த உதவிக்கு நன்றி தெரிவிக்க தனிப்பட்ட முறையில் டெல்லி சென்றிருந்ததாக பன்னீர்செல்வம் கூறியிருந்தார். எனவே இதை அரசியலாக்க வேண்டாம். நிர்மலா சீதாராமன் தமிழகம் வரும்போது பன்னீர்செல்வம் நேரில் சென்று நன்றி கூறுவார், அல்லது கடிதம் எழுதி நன்றி கூறிக்கொள்வார் என்றார்.
இதுபற்றி மூத்த பத்திரிகையாளர் ஷியாம், டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், டெல்லிக்கு வந்து சந்திக்க நேரம் ஒதுக்கிவிட்டு, பன்னீர் செல்வத்தை நிர்மலா சீதாராமன் சந்திக்காமல் தவிர்த்திருந்தால் அது தமிழகத்திற்கான அவமானம் என்றார்.
சந்திப்பை தவிர்க்க சில காரணங்கள் இருக்கலாம் என்றும் அவர் சுட்டி காட்டுகிறார். பன்னீர்செல்வம் முன் அனுமதியே பெறாமல் சந்திக்க முயன்றிருக்க கூடும். நிர்மலா சீதாராமன் தனது வேலையில் மிகவும் கறாராக இருக்க கூடியவர். எனவே இவ்வாறான அணுகுமுறை அவருக்கு பிடிக்காமல் இருந்திருக்கலாம். எனவே சந்திப்பை தவிர்த்திருக்கலாம். ஏற்கனவே ஓக்கி புயல் பாதிப்பு நேரத்தில், நிர்மலா சீதாராமன் ஒரு ட்வீட் செய்திருந்தார். அனைத்து விஷயங்களையும் பன்னீர்செல்வம் அலுவலகத்திற்கும் ட்விட் செய்கிறேன். அவர்கள் கண்டுகொண்டதாக தெரியவில்லை என்று அதில், நிர்மலா சீதாராமன் அதிருப்தி தெரிவித்திருந்தார்.
இவ்வாறு பன்னீர்செல்வம் நடவடிக்கையில் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து அதிருப்தியை காட்டிதான் வந்துள்ளார். மேலும், பிரதமர் மோடி ஆப்பிரிக்க நாடுகள் சுற்றுப் பயணத்தில் இருக்கும்போது, தமிழக அரசியல் சூழ்நிலையில் நாம் தலையிட வேண்டாம் என்று நினைத்து, பன்னீர்செல்வத்தை சந்திப்பதையும் நிர்மலா சீதாராமன் தவித்திருக்க வாய்ப்பு உள்ளது என்று ஷியாம் தெரிவித்தார்.