ஜல்லிக்கட்டுக்கு தொடரும் தடை- சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசின் மனு டிஸ்மிஸ்!!
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரும் தமிழக அரசின் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
டெல்லி: ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரும் தமிழக அரசின் சீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துவிட்டது. ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து பிறப்பித்த உத்தரவு தொடருவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதித்து மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டது. இந்த அறிவிக்கைக்கு எதிராக விலங்குகள் நல அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன.
இதனால் ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இத்தடைக்கு எதிராக தமிழக அரசு சீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது.
இம்மனு மீதான வழக்கின் இறுதி விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, குதிரைப்பந்தயங்களுக்கு தடை விதிக்கப்படவில்லை.
பட்டாசுகளுக்கு தடை விதிக்கவில்லை. ஆனால் ஜல்லிக்கட்டுக்கு மட்டும் தடை விதிக்கப்படுவது ஏன்? என கேள்வி எழுப்பப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டை பொழுதுபோக்காக நடத்த முடியாது; மத ரீதியான நிகழ்ச்சியாகவும் பார்க்க முடியாது; ஜல்லிக்கட்டு என்பதே கொடூரமானது. ஆகையால் தமிழக அரசின் சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்