சென்னை உள்ளிட்ட தென்னிந்திய நகரங்களை தீவிரவாதிகள் இலக்கு வைப்பது ஏன்?
டெல்லி: சென்னை உள்ளிட்ட தென்னிந்திய நகரங்களை இலக்கு வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டி வருவது உளவுத்துறைக்கு தொடர்ந்தும் சவாலாக இருந்து வருகிறது.
தென்னிந்தியாவை இலக்கு வைத்து தீவிரவாதிகள் நடத்த திட்டமிட்ட சதி செயல்கள் பலவும் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மும்பை தாக்குதலைத் தொடர்ந்து சென்னையிலும் அதுபோல ஒரு தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது.

இலங்கை தீவிரவாதிகள்...
இலங்கையில் உள்ள தீவிரவாதிகளை பயன்படுத்தி பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. இத்தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தது. ஆனால் இது முறியடிக்கப்பட்டது.

ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில்..
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் இ தொய்பா மட்டுமல்ல.. ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கமும் கூட தென்னிந்தியாவைத்தான் குறி வைத்துக் கொண்டிருக்கிறது. ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் இணைந்த 23 இந்தியர்களில் 4 பேர் மகாராஷ்டிரா மாநிலத்தவர். எஞ்சிய 19 பேரும் தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள்.

ஹாஜாவும் ரூட்டுகளும்
ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு தென்னிந்தியாவில் இருந்து ஆட்களை சேர்த்துவிடுவதில் முக்கிய பங்கு வகித்தது ஹாஜா பக்ருதீன். இந்த பக்ருதீன் தான் தென்னிந்திய இளைஞர்களை ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தில் சேர்த்துவிடுவதற்கான காரணமாக இருந்தவர். சிங்கப்பூரில் வேலை செய்வதற்கான ஒர்க் பெர்மிட்டை வாங்கிக் கொடுத்து அங்கிருந்து ஈராக் அல்லது சிரியாவுக்கு இளைஞர்களை அனுப்பி வந்ததார் பக்ருதீன். ஆனால் போலீசார் இதை மோப்பம் பிடித்து ஒழித்துக் கட்டினர். இதன்பின்னர் தென்னிந்தியாவில் இருந்து மேற்கு வங்கத்துக்கு ரயில் மூலம் சென்று அங்கிருந்து சட்டவிரோதமாக வங்கதேசத்துக்கு ஊடுருவி பின்னர் ஈராக் அல்லது சிரியா செல்வதற்கான மற்றொரு ரூட்டும் உருவாக்கப்பட்டது.

வளைகுடா தாக்கம்..
கேரளா, தமிழகத்துக்கும் வளைகுடா நாடுகளுக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதும் இம்மாநில இளைஞர்கள் தீவிரவாத இயக்கத்தை நோக்கி செல்வதற்கு ஒரு காரணமாக இருக்கிறது. இதேபோல் கர்நாடகாவின் கடலோர மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களும் தீவிரவாத இயக்கங்களில் இணைவதில் ஆர்வம் காட்டியிருக்கின்றனர்.
பொதுவாக தென்னிந்திய இளைஞர்கள் அதிகளவு பயங்கரவாத செயல்களால் பாதிக்கப்படாதவர்களாக இருக்கின்றனர். அதனால் அவர்கள் எளிதாக இத்தகைய தீவிரவாத இயக்கங்களை நாடுகிறவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களைப் பயன்படுத்தியே தென்னிந்தியாவில் நாசவேலைகளை நடத்தவும் தீவிரவாதிகள் திட்டமிட்டு வருகின்றனர். இருப்பினும் உளவுத்துறை அனைத்து சதிகளையும் வெற்றிகரமாகவே முறியடித்துவருகிறது.












Click it and Unblock the Notifications