வருமானவரி உச்சவரம்பை இப்படியே இழுத்துக் கொண்டிருந்தால் யாருக்குதான் வரி கட்ட மனசு வரும்?
"ஒருவன் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறான். நேர்மையாக வரி செலுத்தவும் முன்வருகிறான். அவனுக்கு ஊக்கம் தரும் விதமாக வருமான வரிச் சலுகைகள் இருக்க வேண்டும். நேர்மையாகச் சம்பாதித்ததை பிடுங்கும் விதமாக வரிகளைப் போட்டு இறுக்கக் கூடாது.. வருமானத்துக்கு வரியும் உச்ச வரம்பும் நிச்சயம் வேண்டும். ஆனால் அது வரி செலுத்துவோரைப் பிழியும் வகையில் இருக்கக் கூடாது..."
-இதைச் சொன்னவர் மறைந்த முதல்வர் மக்கள் திலகம் எம்ஜிஆர். கருப்புப் பணமாக பதுக்க அரசுதான் தூண்டுகோலாக இருக்கிறது என்பதை நேரம் கிடைக்கும்போதெல்லாம் அவர் சொல்லத் தவறியதில்லை.
அவர் நடிகராக இருந்த நாட்களில் ஒரு பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "ஒரு நல்ல காரியத்துக்கு லட்ச ரூபாய் நன்கொடை கொடுத்தேன். அதற்கும் வரி போட்டார்கள். ஆத்திரம் வந்தது. நேரே டெல்லிக்கு போனேன். நிதி மந்திரி சி.சுப்பிரமணியம். அவரைச் சந்தித்து கேட்டேன். 'சட்டம் அப்படி; நான் என்ன செய்ய முடியும்?' என்று கேட்டார். 'தேசத்தின் பாதுகாப்புக்காக நன்கொடை கொடுத்தாலும் வரி விதிப்போம் என்பது நியாயமா?' என்று திரும்பவும் கேட்டேன். விளக்கம் சொன்னாரே தவிர, விலக்கு தரவில்லை. சட்டத்தை ஏமாற்றும் நோக்கம் நடிகர்களுக்கு இல்லை. ஆனால், நாங்கள் ஓரளவு நன்றாக வாழவாவது சட்டம் அனுமதிக்க வேண்டாமா? அதனால்தான் மனம் குறுக்கு வழியைச் சிந்திக்கிறது," என்று கூறியிருந்தார்.
128 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் வரி செலுத்துவோர் எண்ணிக்கை 3.7 கோடி மட்டும்தான் என்கிறது நிதியமைச்சரின் புள்ளி விவரம். அதாவது 3 சதவீதத்துக்கும் குறைவு. மீதியுள்ள அத்தனைப் பேருமே 2.5 லட்ச ரூபாய்க்கும் கீழேதான் சம்பாதிக்கிறார்களா? அப்படியென்றால் பெருமளவில் வரி ஏய்ப்பு நடக்கிறதா? என்ற கேள்விகளுக்கு விடை 'ஆம்'தான்.
வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன் போன்றவற்றில் மக்களின் தனி நபர் வருமானம் அதிகம். வரி செலுத்துவோர் எண்ணிக்கையும் அதிகம். ஆனால் வரி விகிதம் குறைவு. வரி விகிதம் குறைந்தால், வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிக்கும். இதைத்தான் எம்ஜிஆர் முதல்வரான பிறகும் கூட மத்திய அரசுக்குக் கோரிக்கையாக வைத்தார்.
வருமான வரி உச்ச வரம்பாக ரூ 2.5 லட்சத்தை வருமான வரித்துறை நிர்ணயித்துள்ளது. அதற்கு மேல் 5 லட்சம் வரை வருமானம் இருந்தால் 5+2+1 என 8 சதவீதம் வரி கட்டச் சொல்கிறது. இன்றைய வாழ்க்கைச் சூழலில் பலரது ஆண்டு வருவாய் 2.5 லட்சத்தை விட அதிகமாகவே இருக்கிறது. ஆனால் அதை வெளிப்படுத்த, கணக்கில் காட்ட பலரும் முன்வருவதில்லை. வருமான உச்சவரம்பாக ரூ 6 லட்சம் வரை நிர்ணயிக்க வேண்டும் என்ற கோரிக்கையை கடந்த இரண்டாண்டு காலமாக மத்திய அரசு கண்டு கொள்ளாமலேயே உள்ளது.
'ரூ 6 லட்சத்துக்கு மேல் 10 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 15 சதவீத வரியை மட்டும் விதிக்கலாம். கூடுதலாக ரூ 25 ஆயிரம் ரொக்கத்தை வரியாக விதிப்பதைத் தவிர்க்கலாம். ரூ 10 லட்சத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 30 சதவீதம் வரியை விதிக்க வேண்டும்' என மத்திய அரசுக்கு மாதச் சம்பளதாரர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
வருமான வரி செலுத்துவது என்பது ஒரு சிக்கலான சமாச்சாரம் என்ற அச்சம் பெரும்பான்மை மக்களுக்கு உள்ளது. அந்த அச்சத்தைப் போக்கும் வகையில் வருமான வரி சட்டங்கள், விதிமுறைகள், வரி விகிதங்கள் எளிமைப்படுத்தப்பட வேண்டும். மக்களுக்கு அதைப் புரிய வைக்க வேண்டும். அப்போதுதான் அதிக வருமானம் பெறுவோர் தாங்களாக முன்வந்து வரியைச் செலுத்தும் மனநிலைக்கு வருவார்கள்.
கடந்த 2012-13-லிருந்து இந்தியாவில் வருமான வரி விகிதத்தில் பெரிய மாற்றம் ஏதுமில்லை. ஆனால் கடந்த மூன்றாண்டுகளில் வாழ்க்கை முறை எவ்வளவோ மாறிவிட்டது. விலைகள் தறிகெட்டு உயர்ந்து நிற்கின்றன. பெட்ரோலியப் பொருட்களின் விலையும் பல முறை உயர்த்தப்பட்டு விட்டது. ஆனால் வருமான வரி உச்ச வரம்பு மட்டும் மூன்றாண்டுகளாக மாறாமலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.
மாறும் சூழல், ஏறும் விலைகளைக் கருத்தில் கொண்டு வருமான உச்சவரம்பை மாற்றியமைக்காவிட்டால், நேர்மையாய் வரி கட்ட யாருக்குத்தான் மனசு வரும்?