மாற்றி சிந்தித்த தலைநகரம்... நாட்டின் தலையெழுத்து மாறுமா?
டெல்லி: சந்தோஷப்படவும் முடியவி்லை, உற்சாகப்படவும் முடியவி்ல்லை, குதூகளிக்கவும் முடியவி்ல்லை.. டெல்லி பாஜகவினர் இந்த நொடியில் இப்படித்தான் உணர்கின்றனர் - வெளியில் அப்படி இருப்பதாக காட்டிக் கொண்டாலும். காரணம் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் அவரது புதிய கட்சியின் எதிர்பாராத பெரும் எழுச்சி.
இந்த வெற்றி பலரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. இதுவரை தேசிய அளவில் காங்கிரஸ் அல்லது பாஜக அல்லது சம்பந்தப்பட்ட மாநிலத்தைச் சேர்ந்த பிரபலமான உள்ளூர் பிராந்தியக் கட்சி .. என்றுதான் ஆட்சிகள் மாறி மாறி வரும் போகும். ஆனால் இந்திய வரலாற்றில் முதல் முறையாக தலைநகர் டெல்லியில், கட்சி ஆரம்பித்து சில மாதங்களே ஆன ஒரு கட்சி, முதுபெரும் கட்சியான காங்கிரஸை சிங்கிள் டிஜிட்டுக்குத் தள்ளி விட்டதோடு, பாஜகவை நெளிய வைத்து பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தியிருப்பது பெரும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
கேஜ்ரிவாலும், அவரது கட்சியினரும் என்ன நம்பிக்கையி்ல் தேர்தல் களத்தில் நிற்கின்றனர் எனறுதான் ஆரம்பத்தில் அனைவருமே கேலியாக பார்த்தனர். ஆனால் இன்று யாருக்குமே மெஜாரிட்டி கிடைக்காமல் காலி செய்து விட்டார் கேஜ்ரிவால்.

புதிய அரசியல் - மாற்று அரசியல்
மாற்று அரசியல், புதிய அரசியல் என்று பலரும் பேசி வரும் நிலையில் இதுதான் அது என்று கேஜ்ரிவால் நாட்டு மக்களுக்கு சுட்டிக் காட்டுவதாக பலரும் இந்த வெற்றியைக் காண்கின்றனர்.

இத்தோடு நிற்கக் கூடாது
மேலும், பொதுமக்கள் மத்தியில் கேஜ்ரிவாலின் வெற்றி பெரும் சந்தோஷமாகவும் பார்க்கப்படுகிறது. இது இத்தோடு நிற்கக் கூடாது, நாடு முழுவதும் பரவ வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

பாஜகவும் வேண்டாம், காங்கிரஸும் வேண்டாம்...
இதுவரை பாஜகவும், காங்கிரஸும் மாறி மாறி ஆண்டும் கூட எதுவுமே பெரிய அளவில் நடக்கவில்லை. ஊழல்தான் பெருகிக் கொண்டே போகிறது. இதை முற்றிலும் மாற்ற இப்படிப்பட்ட மாற்றம் தேவை. அதன் ஆரம்பம் டெல்லியில் தொடங்கியிருப்பது வரவேற்புக்குரியது என்றும் மக்கள் கூறுகிறார்கள்.

நிச்சயம் நல்லது
ஆம் ஆத்மி போன்ற புதிய வகை அரசியல், மாற்று அரசியல் மக்களின் வரவேற்பைப் பெற்றிருப்பதை சிலர் நல்ல விஷயம்தான் என்று சொல்கிறார்கள். ஊழலில் திளைத்துப் போன, மக்கள் பணத்தை சுரண்டியே கொழுத்துப் போன, மக்களுக்கு எதுவுமே செய்யாமல் வயிறு வளர்த்து வரும் கட்சிகளுக்கு இது மரண அடியாக அமையும் என்பது அவர்களின் கருத்து.

பழைய பெருச்சாளிகள் ஓட வேண்டும்
கேஜ்ரிவால் ஏற்படுத்தி வைத்துள்ள இந்த புதிய வகை அரசியல் அனைத்து மாநிலங்களுக்கும் பரவ வேண்டும். அங்கு இத்தனை காலமாக மக்களை சுரண்டிப் பிழைத்து வரும் அரசியல்வாதிகளும், கட்சிகளும் ஓட்டமெடுக்க வேண்டும். மக்களுக்கான, உண்மையான பிரதிநிதிகள் சட்டசபைகளை அலங்கரிக்க வேண்டும் என்றும் இவர்கள் விருப்பம் தெரிவிக்கின்றனர்.

நாடு முழுவதும் பரவுமா
டெல்லியில் கேஜ்ரிவால் கட்சி ஏற்படுத்திய பெரும் மாற்றம், புதிய தலைமுறை அரசியல் என்ன மாதிரியான பாதிப்புகளை தேசிய அளவில் ஏற்படுத்தப் போகிறது என்பது தெரியவில்லை. ஆனால் நிச்சயம் டெல்லியில் மிகப் பெரிய மாற்றத்தை கேஜ்ரிவால் கட்சி வரும் நாட்களில் ஏற்படுத்தப் போகிறது என்பதில் சந்தேகம் இல்லை.

விலை போகாமல் உறுதியாக இருந்தால்
தனித்து ஆட்சியமைக்கும் பலத்தை பாஜக தற்போது பெறவில்லை. நிச்சயம் அதற்கு கேஜ்ரிவால் கட்சியின் ஆதரவு தேவை. இல்லாவிட்டால் ஆட்சியமைக்க முடியாது. ஆனால் கேஜ்ரிவால் கட்சி ஆதரவு தராது என்றே நம்பப்படுகிறது. ஒருவேளை அதன் கட்சி எம்.எல்.ஏக்களை வளைக்க பாஜக தரப்பு முயலலாம். ஆனால் அப்படி நடக்காமல் அவர்கள் மட்டும் உறுதியாக இருந்தால் நிச்சயம் டெல்லி சட்டசபை ஸ்தம்பிக்கும் - புதிய அரசைக் காண முடியாம்.

அடுத்து என்ன நடக்கும்...
தற்போதைய நிலையில் மெஜாரிட்டி பலம் இல்லாத நிலையில் பாஜக எப்படி ஆட்சியமைக்கப் போகிறது என்பது தெரியவில்லை. குடியரசுத் தலைவர் ஆட்சிக்கான வாய்ப்புகள் உள்ளன. மறு தேர்தலுக்கும் வாய்ப்புகள் இல்லை என்று கூற முடியாது. எதுவும் சரிப்பட்டு வராவிட்டால், நாடாளுமன்றத் தேர்தல் வரை குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி விட்டு, அத்தோடு சேர்த்து மறு தேர்தல் நடத்தப்படலாம் என்றும் பேச்சு அடிபடுகிறது.
பார்க்கலாம், டெல்லியில் ஏற்பட்ட இந்த மாற்றம் நாடு முழுவதும் பரவுமா என்பதை...!












Click it and Unblock the Notifications