குடியரசுத் தலைவர் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றாரா சேகர்ரெட்டி?
குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவில் ஈபிஎஸ், ஓபிஎஸ்ஸோடு மணல் மாஃபியா சேகர் ரெட்டியும் பங்கேற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லி : சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் சிறைத் தண்டனை பெற்ற மணல் மாஃபியா சேகர்ரெட்டி, குடியரசுத் தலைவர் பதவியேற்பு விழாவில் பங்கேற்றதாகவும், அதற்கான ஏற்பாடுகளை ஓ.பன்னீர்செல்வம் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மத்திய அரசின் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு பின் வேலூரைச் சேர்ந்த பொதுப்பணித் துறை காண்டிராக்டர் சேகர் ரெட்டியின் வீடு அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் கணக்கில் காட்டாத ரூ.139 கோடி சொத்து ஆவணங்களும், ரூ.34 கோடி புதிய 2 ஆயிரம் நோட்டுகளும், தங்க கட்டிகளும் சிக்கியது.
அவரைத் தொடர்ந்து தொழிலதிபர் சேகர் ரெட்டியின் கூட்டாளிகளான பிரேம்குமார், சீனிவாசலு, திண்டுக்கல் ரத்தினம், புதுக்கோட்டை ராமச்சந்திரன் ஆகியோரை கடந்த டிசம்பர் மாதம் சிபிஐ கைதுசெய்தது. சட்டவிரோதமாக பணத்தை கைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட தொழிலதிபர் சேகர்ரெட்டி சமீபத்தில் ஜாமீனில் விடுதலையானார்.
சொத்துகள் முடக்கம்
இந்த நிலையில் சேகர் ரெட்டி மீதான பண பரிமாற்ற முறைகேடுகளை அமலாக்கத் துறை விசாரணை நடத்தியது. இதில் முதல் கட்டமாக அவரது ரூ.54 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டன. அடுத்து சேகர்ரெட்டியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ரூ.14 கோடி மதிப்புள்ள 50 கிலோ தங்கத்தை முடக்கி அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்தது.
நண்பர்கள்
தொழிலதிபர் சேகர் ரெட்டி அரசியல் செல்வாக்கு மிகுந்தவர் என்றும், திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழகத் தலைவராக சேகர் ரெட்டியை பரிந்துரைத்தது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்தன. மேலும் இருவரும் நண்பர்கள் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தயவால் சேகர் ரெட்டிக்கு பொதுப்பணித்துறை காண்ட்டிராக்ட்டுகள் ஒதுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
|
பதவியேற்பில் பங்கேற்பா?
அரசியல் மற்றும் அதிகாரிகளை கையில் வைத்துக் கொண்டு ஆட்டம் போட்டவர் சேகர் ரெட்டி என்றும் சிபிஐ, அமலாக்கப்பிரிவு மற்றும் வருமானவரித்துறை அம்பலமாக்கியது. இந்நிலையில் நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக ராம்நாத்கோவிந்த் பதவியேற்ற நிகழ்ச்சியில் சேகர் ரெட்டியும் பங்கேற்றதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்தத் தகவல் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
பெருந்தலைகளுடன் சந்திப்பா?
இதற்காக சேகர் ரெட்டி பெயர் அச்சிட்டு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஓ.பன்னீர்செல்வம் செய்ததாகவும், இது மட்டுமின்றி சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கு சிக்கலில் சிக்கித்தவிக்கும் சேகர் ரெட்டிக்கு சிரமம் நீங்குவதற்காக பாஜக பெருந்தலைகளை சந்திக்க வைத்ததாகவும் கூறப்படுகிறது.