இந்து கடவுளை அவமதிப்பவர்களின் நாக்கை அறுப்போம்: எழுத்தாளர்களை எச்சரிக்கும் ஸ்ரீராம் சேனா
பெங்களூர்: ராமாயணம் மகாபாரதம் போன்ற காவியங்கள் கோடிக்கணக்கான மக்களால் புனிதமானதாக கருதப்படுகிறது. இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் எழுதும் எழுத்தாளர்களின் நாக்கை மக்கள் அறுப்பார்கள் என்று கர்நாடக மாநில ஸ்ரீ ராம சேனா இந்து அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சித்தலிங்க சுவாமி கூறியுள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
ஹம்பியில் உள்ள கர்நாடகப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், புரட்சிகர எழுத்தாளருமான எம்.எம் கல்புர்கிகடந்த ஆகஸ்ட் மாதம் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்துக் கடவுள்கள் மற்றும் உருவ வழிபாடுகளுக்கு எதிரான பல கருத்துக்களை இவர் நீண்ட காலமாக பேசியும் எழுதியும் வந்தார். இதனால், இந்து அடிப்படை வாதிகளின் தனிப்பட்ட எதிரியாக மாறியிருந்தார். கல்புர்கி சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் ஸ்ரீ ராம சேனா இந்து அமைப்பை சேர்ந்த பிரசாத் அட்டவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், வடக்கு கர்நாடகாவில் செய்தியாளர்களை சந்தித்த கர்நாடக மாநில ஸ்ரீ ராம சேனா இந்து அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சித்தலிங்க சுவாமி, ''ராமாயணம், மகாபாரதம் போன்ற காவியங்கள் கோடிக்கணக்கான மக்களால் புனிதமானதாக கருதப்படுகிறது.
கே.எஸ்.பக்வான், சந்திர சேகர பாட்டில் போன்ற எழுத்தாளர்கள், இந்து கடவுள்களை அவமதிப்பது இவர்களின் மனதை புண்படுத்துகிறது. தாங்கள் வழிபடும் ராமனை ஒருவர் விமர்சிப்பதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இப்படி விமர்சிப்பதை நிறுத்திக்கொள்ளா விட்டால் எழுத்தாளர்களின் நாக்கை அவர்கள் அறுப்பார்கள்." என்று கூறியுள்ளார். சித்தலிங்க சுவாமியின் கருத்து தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.