"திமுக" மட்டும் கைவிட்டால்.. கத்காரி கதி அதோ கதியாம்..!
Recommended Video
நாக்பூர்: நிதின் கத்காரிக்கு திமுக கை கொடுக்குமா.. என்னங்க சொல்றீங்க, கத்காரி எங்கே இருக்காரு. திமுக எங்க இருக்கு.. என்று உங்களது மைண்ட் வாய்ஸ், மண்டையில் கொட்டுவது கேட்கிறது. ஆனால் மேட்டர் வேற பாஸ்.
சீனியர் அமைச்சரும், மூத்த பாஜக தலைவருமான நிதின் கத்காரி மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் லோக்சபா தொகுதியிலிருந்து மீணடும் போட்டியிடுகிறார். ஏப்ரல் 11ம் தேதி இங்கு முதல் கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. இவரை எதிர்த்துப் போட்டியிடுபவர் காங்கிரஸ் கட்சியின் நானா படோல்.
இந்த படோல் வேறு யாருமல்ல, முன்னாள் பாஜக எம்பி ஆவார். அதாவது கட்சி தாவி இப்போது காங்கிரஸ் சார்பாக போட்டியிடுகிறார் இந்த படோல். இப்போது கத்காரி நிலைக்கு வருவோம். (அண்ணே, அப்ப அந்த திமுக மேட்டர்?.. இருங்கங்க.. சொல்றோம்.. பதறாதீங்க)
ஒரு பக்கம் வாக்கிங்.. மறு பக்கம் டாக்கிங்.. அட பனியன் மேல யாரு பாருங்கோ.. மதுரையை கலக்கிய ஸ்டாலின்
2014ல் முதல் வெற்றி
நாக்பூரில் கடந்த 2014 தேர்தலில்தான் முதல் முறையாக போட்டியிட்டார் கத்காரி. அந்தத் தேர்தலில் அவர் 2.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் செமையாக வெற்றி பெற்றார். அவர் வீழ்த்தியது சாதாரண ஆள் இல்லைங்க, நான்கு முறை எம்பியாக இருந்தவரான விலாஸ் முட்டம்வர் என்ற ஜாம்பவானை.
சவால்
இப்போது இந்த சீட்டை தக்க வைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் கத்காரி. இதற்காக அவர் தீவிரப் பிரச்சாரத்திலும் ஈடுபட்டுள்ளார். அதை விட முக்கியமானது, பாஜக தலைமைக்கு எதிராக அவ்வப்போது சீண்டல் கருத்துக்களைக் கொடுத்தபடியே இருப்பவர் கத்காரி. எனவே இத்தேர்தலில் அவர் ஜெயித்தால்தான் பாஜகவில் அவரது முக்கியத்துவம் நீடிக்கும். இல்லாவிட்டால் கழித்துக் கட்டப்படும் அபாயம் உள்ளது.
வாக்கு வங்கிகளுக்கு குறி
இதைக் கருத்தில் கொண்டு தற்போது "திமுக" வின் உதவியை நம்பி பல வேலைகளில் இறங்கியுள்ளார் நிதின் கத்காரி. திமுக மட்டும் கத்காரிக்கு சரியாக கை கொடுத்தால் நிச்சயம் பெரும் வெற்றி மீண்டும் சாத்தியம் என்ற நிலை தொகுதியில் உள்ளதாக அரசியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். (சரிண்ணே, ஆனால் தெற்கில் இருக்கும் திமுக எப்படி மேற்கில் நிற்கும் கத்காரிக்கு கை கொடுக்கும்.. இருங்கண்ணே, அடுத்த ஸ்லைடில் விலாவாரியாச் சொல்றோம் வாங்க).
இதுதாங்க திமுக
திமுக என்றால் உடனே நம்ம திமுகவை நீங்க நினைச்சுட்டீங்களா.. அதுதான் இல்லை. தலித், முஸ்லீம் மற்றும் குன்பி Dalit, Muslim, Kunbi (DMK) இதுதான் திமுக. (திமுகவா.. ஏங்க அதை "தமுகு".. இப்படித்தானே சொல்லணும்.. தாராளமா சொல்லலாம்ணே.. தப்பே இல்லை) இந்த வாக்கு வங்கியைத்தான் தற்போது கத்காரி நம்பியிருக்கிறாராம்.
6 தொகுதி நிலவரம்
நாக்பூர் லோக்சபா தொகுதியானது நாக்பூர் தென் மேற்கு, நாக்பூர் தெற்கு, நாக்பூர் கிழக்கு, நாக்பூர் மத்தி, நாக்பூர் மேற்கு மற்றும் நாக்பூர் வடக்கு என 6 சட்டசபைத் தொகுதிகளை உள்ளடக்கியதாகும். இங்கு மொத்தம் 21 லட்சத்து 26 ஆயிரத்து 574 வாக்காளர்கள் உள்ளனர். இதில் பெண்கள் 10 லட்சத்து 45 ஆயிரத்து 934 பேர் ஆவர்.
பாதிக்கும் மேல் பிசிதான்
நாக்பூர் தொகுதி வாக்காளர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஓபிசி எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆவர். அதிலும் குன்பி மற்றும் டெலி சமூத்தினர்தான் பெரும்பான்மையாக உள்ளனர். மீதமுள்ளவர்களில் 15 முதல் 20 சதவீதத்தினர் தலித்துகள். முஸ்லீம்களின் எண்ணிக்கை 12 சதவீதமாகும்.
தலித்துகள்
நாக்பூரில் கிட்டத்தட்ட நான்கரை லட்சம் தலித் வாக்காளர்கள் உள்ளனர். இப்படி இந்த 3 சமூக வாக்குகளும் வெற்றியை நிர்ணயிக்கும் முக்கியக் காரணிகளாக உள்ளன. ஆனால் நம்ம கத்காரி பிராமணர் ஆவார். இதனால்தான் கடந்த 2014 தேர்தலில் இவர் மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றபோது அனைவரும் ஆச்சரியமடைந்தனர். எப்படிங்காணும் இது சாத்தியமாச்சு என்று அனைவரும் வியந்து போயினர்!
மைனாரிட்டி பிராமணர்கள்
நாக்பூர் தொகுதியைப் பொறுத்தவரை இங்கு பிராமண சமூகத்தினர் குறைவுதான். இவர்களை விட மற்ற சமூகத்தினர்தான் அதிகம். எனவே கடந்த தேர்தலில் கத்காரி வெல்ல முக்கியக் காரணம் அப்போது வீசிய மோடி அலை என்று அரசியல் நிபுணர்கள் கூறுகிறார்கள். எனவே இந்த முறை கத்காரி வெல்ல வேண்டுமானால், அவருக்கு திமுக (சரி சரி.. தமுகு) ஓட்டுக்கள் கை கொடுத்தாக வேண்டிய கட்டாயம் உள்ளது.
சாத்தியம் உள்ளதா
தற்போது காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டிப் பூசல் களை கட்டியுள்ளது. இதை கத்காரி தனக்கு சாதகமாக மாற்ற முயன்று வருகிறார். பல காங்கிரஸ் உள்ளூர் தலைவர்கள் தன்னிடம் பேசிக் கொண்டிருப்பதாக கூறி காங்கிரஸை அலற விட்டுள்ளார். மறுபக்கம் இந்த தலித், முஸ்லீம், குன்பி வாக்குகளைக் கவரும் வேலைகளிலும் இறங்கியுள்ளார்.
சுயேச்சைகள்
கத்காரிக்கு சாதகமாக வாக்குகளைத் திருப்ப சுயேச்சை வேட்பாளர்களை பாஜகவே இறக்கியுள்ளதாக சொல்கிறார்கள். இவர்கள் வாக்குகளைப் பிரிப்பார்கள். இதன் மூலம் கத்காரிக்கு சாதகமான நிலையை அவர்கள் ஏற்படுத்துவார்கள் என்று சொல்லப்படுகிறது. அதேசமயம், போட்டிக் களத்தில் பிரகாஷ் அம்பேத்கரின் வன்சித் பகுஜன் அகாடி கட்சியும் உள்ளதால் கத்காரிக்கு இன்னும் அபாயம் நீங்கவில்லை என்கிறார்கள்.
அம்பேத்கரின் சவால்
பிரகாஷ் அம்பேத்கர் இதுகுறித்துக் கூறுகையில் கத்காரி இந்த முறை நிச்சயம் வெல்ல மாட்டார். 200 கோடி ரூபாயை கொட்டி செலவழித்தாலும் கூட அவரால் வெல்ல முடியாது என்று கூறியுள்ளார். இவரது கட்சி நாக்பூரில் மட்டுமல்லாமல் மகாராஷ்டிராவிலும் பாஜக, சிவசேனா கூட்டணிக்கு கணிசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று சொல்கிறார்கள்.
எப்படியோ கத்காரியை திமுக கரை சேர்க்குமா.. பொறுத்திருந்து பார்ப்போம்.