Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெ. வழக்கில் அப்பீல் செய்ய மூன்று தரப்பும் தயக்கம்.. ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம்!

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: ஜெயலலிதாவை ஹைகோர்ட் விடுவித்து வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, கர்நாடக அரசு சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்யுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக ஹைகோர்ட் ஜெயலலிதாவை விடுதலை செய்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம், அதற்கான ஓட்டைகள் தீர்ப்பில் போதிய அளவுக்கு உள்ளன என்று அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சாரியா, கர்நாடக அரசுக்கு சிபாரிசு செய்தார்.

ஹைகோர்ட் வழங்கிய தீர்ப்பில் கூட்டல் கணித தவறு இருப்பதாகவும் ஆச்சாரியா பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

மூன்று தரப்புக்கு வாய்ப்பு

மூன்று தரப்புக்கு வாய்ப்பு

இந்த வழக்கில், மூன்று தரப்பால், சுப்ரீம்கோர்ட்டுக்கு போக முடியும். அதில் முதன்மையானது கர்நாடக அரசு தரப்பு. இரண்டாவது, வழக்கில் சம்மந்தப்பட்ட அன்பழகன் தரப்பு. மூன்றாவது, முதலில் வழக்கை தொடுத்த சுப்பிரமணியன் சுவாமி தரப்பு.

கர்நாடகம் கேள்விக்குறி

கர்நாடகம் கேள்விக்குறி

இந்த மூன்று தரப்பிலும், அதிக உரிமையுள்ள தரப்பு, கர்நாடக அரசு தரப்புதான். எனவேதான், கர்நாடக அரசு அப்பீல் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பிற இரு தரப்புகளிலும் நிலவுகிறது. கர்நாடக அரசு அப்பீல் செய்யுமா, செய்யாதா என்பதுதான் தற்போது தொக்கி நிற்கும் கேள்வி.

ஆய்வு செய்யுதாம்..

ஆய்வு செய்யுதாம்..

கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் இதுபற்றி கேட்டால், அப்பீல் செய்ய வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றி சட்ட வல்லுநர்கள் குழு ஆய்வு செய்து முடிவை எடுக்கும் என்று தெரிவித்தார். இந்த வழக்கில் 90 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய கெடு உள்ளபோதும், ஆச்சாரியா சிபாரிசு செய்த பிறகும் கர்நாடக அரசு அப்பீலுக்கு கால தாமதம் செய்வது வியப்பை ஏற்படுத்துகிறது.

ஏன் தாமதம்

ஏன் தாமதம்

அப்பீல் செய்ய கர்நாடக அரசு காலம் தாழ்த்துவதன் பின்னணியில் சட்ட காரணங்களைவிட, அரசியல் காரணங்களே அதிகம் உள்ளதாம். காங்கிரஸ் மேலிடம் பச்சைக் கொடி காட்டாமல் கர்நாடக அரசு, சுப்ரீம்கோர்ட் படி ஏறப்போவதில்லை என்கின்றனர் கர்நாடக காங்கிரஸ் வட்டாரத்தில்.

என்ன லாபம்?

என்ன லாபம்?

"ஜெயலலிதா வழக்கில் அப்பீல் செய்வதால் கர்நாடக அரசுக்கு எந்த லாபமும் கிடையாது. ஆனால், அப்பீலுக்கு போகாமல் இருந்தால் நிறைய லாபம் உள்ளது" என்கிறார் கன்னட மூத்த பத்திரிகையாளர் நஞ்சுண்டப்பா. இரு மாநில உறவு கெடக்கூடாது என்பது வெளியே காண்பிக்கப்படும் காரணம் என்றாலும், மேகதாது விவகாரம் இதில் முக்கியமான கருப்பொருள் என்கிறார் அவர்.

மேகதாது

மேகதாது

காவிரியின் குறுக்கே, மேகதாது என்ற பகுதியில் கர்நாடகா அணை கட்ட உள்ளது. இதன்மூலம் மைசூர், மண்டியா, ராம்நகர், பெங்களூரு ஊரகம், தும்கூர் உட்பட தென் கர்நாடக மாவட்டங்கள் பலவும் பயன்பெறும். இந்த மாவட்டங்களில் சுமார் 100 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கர்நாடக முதல்வர் சித்தராமையாவும், மைசூர் மண்ணின் மகன். எனவே, மொத்தமாக வாக்குகளை அள்ளவும், கர்நாடக வரலாற்றில் நீங்கா புகழ் பெறவும் மேகதாது, சித்தராமையாவுக்கு உதவும் என்கிறார்கள் கன்னட மூத்த பத்திரிகையாளர்கள்.

சித்தராமையாவுக்கு நெருக்கடி

சித்தராமையாவுக்கு நெருக்கடி

இந்நிலையில்தான், சித்தராமையாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், வழக்கறிஞர் ஆச்சாரியா வெளிப்படையாக பேட்டிகள் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது. பாமகவும் இதை உணர்ந்துதான் நேரில் மனு கொடுத்துள்ளது.

என்ன செய்யும் கர்நாடகா?

என்ன செய்யும் கர்நாடகா?

இப்படி அரசியல்ரீதியாக நெருக்கடிகள் அதிகரித்தாலும், தீர்ப்பில் கூட்டல் தவறு இருப்பது மக்கள் மத்தியில் பரவலாக விவாதிக்கப்பட்டாலும், வேண்டுமானால், வேண்டா வெறுப்பாக கர்நாடகம் அப்பீலுக்கு போகுமே தவிர, ஆச்சாரியாவை, அரசு வக்கீலாக தொடரச் செய்யுமா என்பது சந்தேகம்தான் என்கின்றனர் சித்தராமையா நடவடிக்கையை உன்னிப்பாக கவனிக்கும் பத்திரிகையாளர்கள்.

எஸ்கேப் கர்நாடகா

எஸ்கேப் கர்நாடகா

ஜெயலலிதா வழக்கில் இருந்து கர்நாடகம் விலகி இருக்கவே விரும்புவது தொடக்கம் முதலே உள்ளங்கை நெல்லிக்கனி போல தெரிகிறது. ஏனெனில், சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவை குற்றவாளி என்று அறிவித்த நிலையில், ஹைகோர்ட்டில் மேல்முறையீடு விசாரிக்கப்படும்போது, கர்நாடக அரசு எதுவுமே நடக்காதது போல இருந்து கொண்டது.

குளறுபடி கர்நாடகா

குளறுபடி கர்நாடகா

கர்நாடகம்தான் வழக்கை நடத்துவது தெரிந்திருந்தும், சித்தராமையா அரசு, தங்கள் சார்பில் அரசு வக்கீலை நியமிக்கவில்லை. அன்பழகன் மனு போட்டு, சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்ட பிறகுதான், 1 நாள் மட்டுமே எஞ்சியிருந்ததால் ஆச்சாரியாவை அரசு வக்கீலாக நியமித்தது கர்நாடக அரசு. இந்த அப்பீல் வழக்கு குளறுபடிக்கு, கர்நாடகாதான் அடித்தளம் போட்டது என்றாலும் மிகையில்லை.

திமுக நிலை

திமுக நிலை

கர்நாடக அரசு அப்பீல் செய்யட்டும் என்றுதான் திமுக விரும்புகிறதே, தவிர, திமுகவும் இந்த வழக்கில் முன்னால் சென்று நிற்க விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. திமுக தலைமை மவுனம்காப்பதன் பின்னணியும் இதுவே என கூறப்படுகிறது. அவ்வாறு திமுக முன்னால் சென்று நின்றாலும், ஜெயலலிதாவை ஒழித்துக்கட்ட திமுக முயலுவதாக செய்திகள் பரப்பப்பட்டு மக்கள் மனதில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்று திமுக மேலிடம் கருதுவதாக தகவல்கள் வெளியாகின்றன. ஆக, இதிலும் அரசியல் முக்கிய பங்கு வகிக்கிறது.

பாமகவுக்கும் அரசியல்

பாமகவுக்கும் அரசியல்

பாமக இந்த விஷயத்தில் முனைப்பு காட்டுவதற்கும், அரசியல்தான் காரணம் என்று கூறப்படுகிறது. ஜெயலலிதாவை நெருக்கடியில் வைத்திருப்பதன் மூலம் அடுத்த பொதுத்தேர்தலில் கணிசமான சீட்டுகளை பெற முடியும் என்று பாமகவும் அரசியல் கணக்கு போடுகிறது. அதற்கேற்ப அவர்களுக்கு எதிர்வினைகளும் வரத்தொடங்கியுள்ளன. பாமக தலைவர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியதை வரவேற்பவர்களைவிட, விமர்சிப்பவர்களே அதிகம் உள்ளனர்.

இது பாஜக அரசியல்

இது பாஜக அரசியல்

சுப்பிரமணியன்சுவாமி வழக்கு தொடரலாம் என்று விரும்பினாலும், பாஜக தனது அரசியல் காரணங்களுக்காக அவரை பிடித்து கட்டிப்போட முயலுகிறது. பாஜகவுக்கும், 2016 கூட்டணி கண் முன்பு வந்து போகிறது. தமிழகத்தில் பாஜக கால்பதிக்க ஜெயலலிதாவுடன் சேருவதை தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு அக்கட்சி வந்துள்ளதாக தெரிகிறது.

அனைத்தும் அரசியல்மயம்

அனைத்தும் அரசியல்மயம்

ஆகமொத்தத்தில், கர்நாடகம், திமுக, பாஜக என அனைத்து தரப்புமே, தற்போது இதை அரசியலாகவே பார்க்கின்றன. சட்ட பிரச்சினை இரண்டாம்பட்சமாக போய்விட்டது. மக்களின் மனநிலையும் அப்படியே இருப்பதால் அரசியல் கட்சிகளும் அதே பாதையில் பயணிக்கின்றன. பொறுத்திருந்து பார்ப்போம், கர்நாடகா என்ன முடிவெடுக்கிறது என்பதை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+