356க்கு வாய்ப்பில்லை... ஆனால் 355ஐ கையில் எடுக்குமா மோடி அரசு?
டெல்லி: தமிழகத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையைக் காரணம் காட்டி இங்கு தனது மூக்கை நுழைக்க பாஜக தீவிரமாகியுள்ளதாக தெரிகிறது. ஆனால் ஜெயலலிதாவின் நல்ல நண்பர் என்று அறியப்படும் பிரதமர் மோடி அதைச் செய்வாரா என்று தெரியவில்லை. ஆனால் இதை விட்டால் பின்னர் நல்ல சான்ஸ் இல்லை என்று தமிழக பாஜக தரப்பில் மோடிக்கு அழுத்தம் கொடுத்து, தமிழகத்தில் அரசியல் சாசனத்தின் 355வது பிரிவை அமல்படுத்த பாஜக முயலலாம் என்று தெரிகிறது.
356 என்பது மாநில அரசை டிஸ்மிஸ் செய்யப் பயன்படுத்தப்படும் பிரிவாகும். ஆனால் பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றம் கொடுத்த கிடுக்கிப் பிடியான தீர்ப்பைத் தொடர்ந்து இந்த சட்டப் பிரிவை பயன்படுத்துவதில் மத்திய அரசு அவ்வளவு சீக்கிரம் முடிவெடுப்பதைத் தவிர்த்து வருகிறது.
எனவே தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை மோடி அரசு கொண்டு வருவதற்கான வாய்ப்பே இல்லை என்கிறார்கள். இதற்கு வேறு சில காரணங்களும் உள்ளன.

அப்படியே பாஜகவுக்கு எதிராக திரும்பும்
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற காரணத்தைக் காட்டி ஆட்சியை டிஸ்மிஸ் செய்தால், தற்போது ஜெயலலிதாவுக்கு ஆதரவாக மட்டுமே உள்ள மக்கள் அலையானது, அப்படியே பாஜகவுக்கு எதிரான அலையாக மாறி மொத்தமாக அக்கட்சியை கொட்டிக் கவிழ்த்து விடும் என்கிறார்கள் அரசியல் மற்றும் மக்கள் மனம் தெரிந்தவர்கள்.

திமுக அதிமுகவைத் தாண்டி வாய்ப்பே இல்லை
மேலும் தமிழக மக்களைப் பொறுத்தவரை அவர்கள் பாஜகவை என்றுமே நம்பியதும் இல்லை ஆதரித்ததும் இல்லை. இந்த லோக்சபா தேர்தலிலும் கூட பாஜக கூட்டணியை மக்கள் முழுமையாக ஏற்கவில்லை. வெறும் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றியைக் கொடுத்தனர். அதிலும் கூட தர்மபுரியில் பாஜக உதவியுடன் பாமக தனது ஜாதி ரீதியிலான பலத்தில்தான் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக அல்லது அதிமுகதான்
தமிழக மக்களின் மனநிலை இந்த நிமிடம் வரை பெரிய அளவில் மாறவில்லை என்பதே உண்மை. திமுக அல்லது அதிமுக என்ற மனப்பாங்குதான் மக்களிடம் உள்ளது. காரணம், அவர்களுக்கு மாற்றாக உருப்படியான அரசியல் கட்சியாக யாரையுமே அவர்கள் பார்க்கவில்லை என்பதே.

வாக்கு வியாபாரிகள்
விஜயகாந்த்தாக இருந்தாலும் சரி மற்றவர்களாக இருந்தாலும் சரி அவர்களை வெறும் வாக்கு வங்கி வியாபாரிகளாக மட்டுமே தமிழக மக்கள் பார்க்கிறார்கள். தங்களுக்கு உள்ள வாக்கு வங்கிகளை வைத்து கூட்டணிக்காகவும், பதவிக்காகவும் இவர்கள் பேரம் பேசும் தலைவர்கள் என்ற எண்ணமே மக்களிடம் உள்ளது.

கருணாநிதி - ஜெயலலிதா
மேலும் தமிழகத்தைப் பொறுத்தவரை தமிழக மக்களைப் பொறுத்தவரை தமிழகத்தை தலைமை தாங்கக் கூடிய தலைவர்களாக இன்றளவும் ஜெயலலிதா அல்லது ஜெயலலிதா என்பதாகத்தான் கருத்து உள்ளது. அவர்களைத் தாண்டி வேறு யாரிடமும் தமிழகத்தின் தலைமைப் பொறுப்பை அவர்கள் கொடுக்க முன்வருவார்கள் என்பது சந்தேகம்தான்.

பாஜகவின் நப்பாசை
இப்படி எதார்த்த நிலை தெரிந்திருந்தும் கூட கிடைத்துள்ள கேப்பில் கிடா வெட்டி விடலாமா என்ற நப்பாசையில் பாஜகவினர் அலைவதாக கூறுகிறார்கள்.

சட்டம் ஒழுங்கை மட்டும் கையில் எடுத்தால்
அதற்கு முதல் படியாக தமிழகத்தின் சட்டம் ஒழுங்கை மட்டும் மத்திய அரசின் கையில் எடுக்க வைக்கலாம் என்ற தமிழக பாஜகவினர் மத்திய அரசுக்கு நெருக்கடி தருவதாக கூறுகிறார்கள். அதாவது 355வது பிரிவு, ஒரு மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தால் அங்கு மத்திய அரசு ஆளுநர் மூலமாக சட்டம் ஒழுங்கை மட்டும் கையில் எடுத்து நிர்வகிக்க வகை செய்கிறது.

தமிழிசை சூசகத் தகவல்
இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜனும் கூட சூசகமாக உணர்த்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மத்திய அரசு திட்டமிட்டு அரசியல் சாசனப் பிரிவு 355-ஐ நோக்கி செல்லவில்லை. ஆனால், சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள், தீவிரவாதம் தொடர்பானவற்றை நாங்கள் கவனித்து வருகிறோம். தமிழக மக்களை பாதுகாக்க வேறுவழி இல்லை என்றால் இங்கு என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்றார் அவர்.

ரஜினி உஷார்...!
இப்படி தமிழகத்தில் தனது காலை வலுவாக ஊன்ற முயலும் பாஜக அதற்காக எந்த வாய்ப்பு கிடைத்தாலும் பரவாயில்லை பயன்படுத்திக் கொண்டு விடலாம் என்ற எண்ணத்தில் இருப்பதாக தெரிகிறது.. இந்த நேரத்தில் தமிழக மக்களை விட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான் ரொம்ப உஷாராக இருக்க வேண்டும். மக்கள் தெளிவாக இருந்து விடுவார்கள். ஆனால் ரஜினிதான் ஏமாந்து போய் விடாமல் கவனமாக இருக்க வேண்டும் என்று அவரது நலம் விரும்பிகள் கருதுகிறார்கள்.












Click it and Unblock the Notifications