இன்று குளிர்கால கூட்டத்தொடர்.. ரூபாய் நோட்டு விவகாரத்தில் புயலை கிளப்ப எதிர்கட்சிகள் திட்டம்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்கட்சிகள் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் 500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டது தொடர்பாக எதிர்கட்சிகள் புயலை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி கடந்த 8ம் தேதி இரவு அறிவித்தார். மேலும் புதிய 500 மற்றும் 2000 நோட்டுகளை அவர் அறிமுகம் செய்து வைத்தார். புதிய நோட்டுகளை மாற்ற பல்வேறு இன்னல்களை மக்கள் சந்தித்து வருகின்றன. இதனால் உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குவதால் அவையில் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கட்சிகள் எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்கட்சிகள் ஆலோசனை
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ரூபாய் நோட்டுகள் விவகாரத்தை ஒருமித்த குரலில் எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. இதுகுறித்து முடிவு செய்ய காங்கிரஸ் உள்பட 13 கட்சிகளின் பிரதிநிதிகள் செவ்வாய்க்கிழமை டெல்லியில் கூடி ஆலோசனை நடத்தினார்கள். இந்தக் கூட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, ஐக்கிய ஜனதா தளம், தி.மு.க. உள்ளிட்ட கட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
அனைத்துகட்சி பேரணி
அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் இன்று பேரணியாக சென்று, 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது குறித்து குடியரசுத்தலைவரை சந்தித்துப் பேசலாம் என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி ஆலோசனை தெரிவித்து இருந்தார். இதை தேசிய மாநாட்டுக்கட்சி மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள்ஆமோதித்தன. மற்ற கட்சிகளுக்கு இதில் உடன்பாடு இல்லை. உடனடியாக குடியரசுத்தலைவரை சந்திப்பது நல்லதல்ல. அரசு என்ன சொல்கிறது என்று கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு வாய்ப்பில்லாமல் செய்துவிடக் கூடாது என்று அக்கட்சிகள் கருத்து தெரிவித்தன.
குடியரசுத்தலைவருடன் சந்திப்பு
நாடாளுமன்றத்தில் முதலில் விவாதித்து விட்டு பிறகு குடியரசுத் தலைவரை சந்திக்கலாம் என்று காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. இதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தில் இதுதொடர்பாக விவாதித்து விட்டு, பின்னர் குடியரசுத்தலைவரை சந்திப்பது என ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக இன்றும் எதிர்க்கட்சிகள் கூடி ஆலோசனை நடத்த உள்ளன. ஆனால் மம்தா பானர்ஜி மட்டும் தனது கட்சியினருடன் இன்று முதலில் குடியரசுத் தலைவரைச் சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
சுமூகமாக நடக்குமா?
ரூபாய் நோட்டுகள் செல்லாது என திடீரென அறிவிக்கப்பட்டதால் நாடு முழுவதும் ஏழை, எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். தங்களிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அச்சத்தில் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இந்த விகாரத்தில் எதிர்கட்சிகள் அரசுக்கு எதிராக பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளன. இதனால் இந்த கூட்டத்தொடரில் புயல் வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.