அப்பப்ப “பய் பய்”னு கட்டிப் பிடிச்சுக்கும் லாலு, நிதீஷ்.. ஏன்?
பாட்னா: எதிரும் புதிருமாக இருக்கும் நிதீஷ் குமாரும், லாலு பிரசாத் யாதவும் சமீப காலமாக எதாவது ஒரு விழாவை முன்வைத்து சந்தித்துக் கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
இது பீகார் அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விக்குறிகளுடன் பார்க்கப்பட ஆரம்பித்துள்ளது. இருவரும் வரும் சட்டசபைத் தேர்தலில் இணைந்து கை கோர்ப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இதை நிதீஷ் குமாரும் கூட வெளிப்படையாகவே பேச ஆரம்பித்துள்ளார். 2015ல் பீகாரில் சட்டசபைத் தேர்தல் வருகிறது என்பது நினைவிருக்கலாம்.

லோக்சபா தேர்தலில் பேரடி
லோக்சபா தேர்தலில் மிகப் பெரிய அடியை நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் சந்தித்தது. இதையடுத்து அதிரடியாக முதல்வர் பதவியிலிருந்து விலகி விட்டார் நிதீஷ் குமார். தற்போது பீகாரைச் சுற்றி வந்து கொண்டிருக்கிறார்.

பெரிய கூட்டணி அவசியம்
இந்த நிலையில் நிதீஷ் குமார் வரும் சட்டசபைத் தேர்தல் குறித்து கருத்து தெரிவிக்கையில், கடந்த 8 வருடமாக நாங்கள் பீகாரை சிறப்பாகவே ஆண்டுள்ளோம். வரும் தேர்தலில் மிகப் பெரிய கூட்டணியை அமைக்க வேண்டிய அவசியம் வந்துள்ளது.

பாஜகவின் அசிங்க அரசியல்
காரணம், பாஜக அசிங்கமான அரசியலில் ஈடுபட்டுள்ளது. எனவே அதை முறியடிக்க நிச்சயம் வலுவான, பெரிய கூட்டணி அவசியம். அதற்கு என்ன தேவையோ அதைச் செய்ய நான் தயாராக இருக்கிறேன் என்றார் நிதீஷ்.

கை கொடுத்த தெய்வம் லாலு
இந்த நிலையில் தற்போது நிதீஷுக்கு கை கொடுக்க ஆரம்பித்துள்ளார் லாலு பிரசாத் யாதவ். இருவரும் எதிரும் புதிருமாக இருந்த நிலையில் நிதீஷ் ராஜினாமாவுக்குப் பின்னர் அவருடன் இணைய ஆரம்பித்துள்ளார் லாலு.

நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆதரவு
முதலில் புதிய ஐக்கிய ஜனதாதள அரசுக்கு சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஆதரவு கொடுத்தார் லாலு. சமீபத்தில் 2 ஐக்கிய ஜனதாதள வேட்பாளர்கள் ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெறவும் ஆதரவு கொடுத்தார் லாலு.

பாஜகவை விரட்ட வேண்டும்
இதுகுறித்து இரு தலைவர்களுமே சமீபத்தில் கூறுகையில் பாஜகவை ஆட்சிக்கு வர விட்டு விடக் கூடாது. அது பீகாருக்கு நல்லதல்ல என்று தெரிவித்திருந்தனர்.

எதிரிகள்தான்.. ஆனால் நீண்ட கால நண்பர்கள்
லாலுவும் சரி, நிதீஷும் சரி சமீப ஆண்டுகளாகத்தான் எதிரும் புதிருமாக உள்ளனரே தவிர 70களிலிருந்தே இருவரும் ஜனதாக் கட்சியில் இணைந்து செயல்பட்டவர்கள் ஆவர். 1997ல் லாலு ராஷ்டிரிய ஜனதாதளத்தை ஆரம்பித்தார். 2003ல் ஐக்கிய ஜனதாதளம் பிறக்க நிதீஷ் உதவியாக இருந்தார்.

ராப்ரி ஆட்சி போக நிதீஷ் காரணம்
2005ம் ஆண்டு லாலுவின் மனைவி ராப்ரி தேவி முதல்வராக இருந்தார். ஊழல் புகார்களின் பேரில் அவர் பதவி விலக நேரிட்டது. இதையடுத்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தார் நிதீஷ் குமார். 2010ல் 2வது முறையாக அவரது கட்சி ஆட்சியைப் பிடித்தது என்பது நினைவிருக்கலாம்.

வரும் தேர்தலில் கை கோர்க்க வாய்ப்பு
இந்த நிலையில் வரும் சட்டசபைத் தேர்தலில் நிதீஷும், லாலுவும் இணைந்து செயல்படும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன என்பதால் பாஜக தரப்பில் இப்போதே பரபரப்பு தொற்றிக் கொள்ள ஆரம்பித்துள்ளதாம்.












Click it and Unblock the Notifications