திருமணமான பெண்ணை கடத்திப்போய் ஒரு மாதம் சீரழித்த 6 கயவர்கள் - ராஜஸ்தான் பயங்கரம்
ராஜஸ்தானில் திருமணமான இளம் பெண் ஒருவரை ஆறுபேர் கொண்ட கயவர்கள் கடத்திக்கொண்டு போய் ஒரு மாதம் சீரழித்துள்ளனர்.
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் புதிதாக திருமணமான இளம்பெண் ஒருவரை ஆறுபேர் கொண்ட கும்பல் கடத்தி கொண்டு போய் ஒருமாதம் வைத்திருந்து கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கும்பலிடம் இருந்து தப்பி வந்த அந்த பெண் கொடுத்த புகாரை அடுத்து 3 பேரை கைது செய்துள்ளனர், தலைமறைவாக உள்ள மேலும் மூன்று கயவர்களை தேடி வருகின்றனர்.
நாகர் மாவட்டம் காவல்நிலையம் சனிக்கிழமையன்று பரபரப்பாக காணப்பட்டது. பதற்றத்துடன் காவல்நிலையத்திற்கு வந்த ஒரு பெண் தன்னை ஆறுபேர் கொண்ட கும்பல் ஒரு மாதகாலமாக கூட்டு பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார்.
அந்த பெண் புதிதாக திருமணமானவர், கடந்த மாதம் வீட்டை விட்டு வெளியே போனவர் வீடு திரும்பவில்லை என்று அந்த பெண்ணின் குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். காவல்துறையினர் தேடி வந்த நிலையில் அலங்கோலமான நிலையில் அந்தப் பெண் காவல்நிலையம் வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விகாஷ் குமார், ராஜூராம், தேஷ்ராஜ், பல்வீர், மோத்தாராம், வித்யாதர் ஆகிய ஆறுபேரும் தன்னை கடத்திக்கொண்டு போய் ஓரிடத்தில் அடைத்து வைத்து அவர்களுக்கு தேவையான போது தன்னை கொடூரமான முறையில் பலாத்காரம் செய்ததாகவும் அழுதுகொண்டே கூறினார். போதை மயக்கத்தில் ஆறு பேரும் இருந்த போது தப்பி வந்து விட்டதாகவும் அந்தப் பெண் தெரிவித்தார்.
ஒருமாதம் நரக வேதனையை அனுபவித்ததாகவும் காவல்நிலையத்தில் அந்த பெண் கூறியிருந்தார், பெண்ணின் புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் ஆறுபேர் மீதும் கடத்தல், பலாத்காரம் ஆகிய பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து 3 பேரை கைது செய்துள்ளனர். ராஜூராம், விகாஷ், தேஷ்ராஜ் ஆகியோரை கைது செய்துள்ளதாகவும் மேலும் 3 பேரை தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.