கொச்சியில் ஆட்டோவிலேயே பெண் பிரசவம் - தாயும், சேயும் நலம்
கொச்சி: கேரளாவின் கொச்சியில் பெண் ஒருவருக்கு ஆட்டோவிலேயே சுகப்பிரசவம் நடைபெற்ற சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொச்சியை அடுத்துள்ள தலவாச்சப்பரா குக்கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவ வலி எடுத்தது. இதையடுத்து அந்த பெண் கணவரை அழைத்துக் கொண்டு நடந்தே பல கிலோ மீட்டர் தூரம் வந்து ஒரு இடத்தில் ஜீப்பை பிடித்து நதிக்கரையை அடைந்தார்.
அங்கிருந்து படகு மூலம் வந்த அவர் பின்னர் ஆட்டோ ஒன்றின் மூலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் மருத்துவமனையை அடைந்தார். ஆனால் அங்கு டாக்டர்கள் இல்லை.
இதையடுத்து மீண்டும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அவர் ஆட்டோவில் சென்றபோது அவருக்கு பிரசவம் நடந்தது. அப்பெண் அழகான பெண்குழந்தையை பெற்றார்.
அருகில் இருந்த போலீசார் உடனடியாக மருத்துவமனைக்கு போன் செய்து அப்பெண்ணுக்கு உதவும்படி கோரினர். இதனைத் தொடர்ந்து அப்பெண்மணியும், குழந்தையும் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டனர். தாயும், சேயும் நலமாக உள்ளனர்.
இச்சம்பவத்தினால்அப்பகுதியில் மாவட்ட மருத்துவ அதிகாரி மருத்துவமனைகளில் திடீர் சோதனை நடத்தி உள்ளார். மேலும், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவர் சந்தித்து பேசினார்.