ஆயிரம் ரூபாய் மாற்ற முடியாத அதிர்ச்சியில் வங்கி வாசலில் பெண் மாரடைப்பில் மரணம்
பழைய ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்ற வங்கிக்குப் போய் மாற்ற முடியாமல் போனதால் பெண் ஒருவர் மாரடைப்பில் மரணமடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோரக்பூர்: 1000 ரூபாய், 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்றும் பழைய நோட்டுக்களை வங்கிகள், தபால் நிலையங்களில் கொடுத்து மாற்றிக்கொள்ளலாம் எனவும் பிரதமர் மோடி, செவ்வாய்கிழமை அறிவித்தார். இந்த நிலையில் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்ற வங்கிக்குப் போய் மாற்ற முடியாத அதிர்ச்சியில் பெண் ஒருவர் வங்கி வாசலில் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் கோராக்பூரை சார்ந்தவர் தித்ரஜி ,40. இவர் சலவை தொழிலாளி. இவர் தன்னிடம் உள்ள இரு ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மாற்ற வங்கிக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த வங்கி அதிகாரிகள் , பணத்தை இரண்டு நாட்களுக்கு மாற்ற முடியாது என்று கூறியிருந்தனர்.

இதனை தவறாக புரிந்து கொண்ட, தித்ரஜி வங்கியில் இருந்து ஒருவித பதற்றத்துடன் வெளியேறினார். செல்லாத நோட்டுக்களை வைத்து என்ன செய்வது என்று யோசித்த அந்தப் பெண்ணுக்கு மயக்கமாக வந்தது.
வங்கியின் உள்ளே இருந்து வாசல் அருகே வரும்போது மாரடைப்பு ஏற்பட்டது. சுருண்டு விழுந்த அவர் உடனே உயிரிழந்தார் ,அவரது கையில் இருந்த ஆயிரம் ரூபாய் நோட்டுகள் மற்றும் வங்கி பாஸ்புக் அருகேயே சிதறிக் கிடந்தன. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். தித்ரஜியின் உறவினர்களுக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த உறவினர்கள் தித்ரஜியின் உடலைப் பார்த்து கதறி அழுதனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையில் ஈடுப்பட்டுவருகின்றனர்.












Click it and Unblock the Notifications