உ.பியில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் சடலம் மீட்பு... பலாத்காரம் செய்யப்பட்டதாக மகன் புகார்
லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட பெண் பலாத்காரம் செய்து கொல்லப் பட்டிருக்கலாம் என அவரது குடும்பத்தார் குற்றம் சாட்டியுள்ளனர்.
உத்திரப்பிரதேசத்தின் தலைநகர் லக்னோவில் இருந்து சுமார் 130 கிமீ தொலைவில் உள்ளது பஹாரியா மாவட்டம். இந்நிலையில் அங்குள்ள மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டது.
சமீபத்தில் அப்பெண் அப்பகுதியில் உள்ள சாராய வியாபாரிகளைக் குறித்து போலீசில் புகார் அளித்ததாகவும், எனவே அவர்கள் தான் அவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்திருக்க வேண்டும் எனவும் கொலை செய்யப்பட்ட பெண்ணின் மகன் புகார் அளித்துள்ளார்.
புகாரை அடுத்து விசாரணையைத் துவக்கியுள்ள போலீசார், இது தொடர்பாக இதுவரை யாரையும் கைது செய்யவில்லை எனக் கூறப்படுகிறது.
அப்பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகு தான் நடந்த சம்பவம் குறித்து ஓரளவுக்கு தெளிவான முடிவுக்கு வர இயலும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் உத்திரப்பிரதேச மாநிலம் படான் மாநிலத்தில் சகோதரிகள் இருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்திய நிலையில், இச்சம்பவம் மேலும் பரபரப்பை கூட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications